சென்னையில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடி பறிமுதல்.. 2 பேர் கைது
சென்னையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்ற இரண்டு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பழைய நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மாற்றி கொள்ள காலக்கெடுவும் வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான பிரச்சனைகளும், மக்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு விஜயகுமார் என்பவர் ஷெனாய் நகரில் இருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அமைந்தகரை அருகில் போலீசார் அவர்களிடம் சோதனை செய்த போது அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் வந்த விஜயகுமார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.