பூச்செடியை ஆடு மேய்ந்ததை தட்டிக் கேட்ட மூதாட்டியை அடித்துக் கொன்ற 2 பெண்கள்
தர்மபுரி: அரூர் அருகே பூச்செடிகளை ஆடு மேய்ந்தது தொடர்பாக வயதான பெண்ணை இரண்டு பெண்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சுண்டாங்கிப்பட்டியில் இருக்கும் பெரியார் நகர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சின்னமூக்கன். அவரது மனைவி ராதா(65). பூ, காய்கறி வியாபாரம் செய்து வந்த ராதா தனது வீட்டிற்கு அருகே பூச்செடிகள் வளர்த்துள்ளார்.
ராதாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சாலா(34) என்ற பெண்ணின் ஆடுகள் பூச்செடிகளை அடிக்கடி மேய்ந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ராதாவுக்கும், சாலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் சாலாவின் ஆடுகள் பூச்செடிகளை மேய்ந்துள்ளன. இதனால் சாலாவுக்கும், ராதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சாலாவும், அவரது மாமியார் கந்தம்மாளும்(65) சேர்ந்து தாக்கியதில் அவரது தலையில் அடிபட்டு கீழே விழுந்தார்.
தலையில் காயம் அடைந்த ராதாவை அக்கம் பக்கத்தினர் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலா, கந்தம்மாள் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ராதாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications