பண்டிகை வந்தால் போதும் பகல் கொள்ளையில் குதிக்கும் ஆம்னி பஸ்கள்... பயணிகள் பெரும் அவதி
சென்னை: ஆயுதபூஜை விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டதாம்.
அரசு பேருந்து, மற்றும் ரயில்கள் ஏற்கனவே டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் உள்ள நிலையில், பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாடத்தொடங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நேற்று இரவு மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு வர பஸ் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
இது போன்ற பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களை ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு டிக்கெட் கட்டணத்தை 3 மடங்கு ஏற்றி வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக ரூ.600 முதல் ரூ.800 வரை வசூலிக்கப்படும் ஏ.சி. செமி சிலிப்பர் பஸ்களில் நேற்றிரவு மதுரையில் இருந்து சென்னைக்கு வர ரூ.1200 முதல் ரூ.2200 வரை வசூலிக்கப்பட்டது.
பயணிகள் சென்னை செல்வதற்கு பஸ்சில் இடம் கிடைக்காமல் அலைந்து திரிவதை பார்த்து டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தினர்.
இதே போன்ற நிலை திருச்சி மற்றும் கோவையிலும் காணப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.1800 கட்டணமும், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.1,600 முதல் ரூ.2000 வரை கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
இதில் மதுரையில் இருந்து தான் அதிக அளவு ஆம்னி பஸ்கள் சென்னைக்குஇயக்கப்பட்டன. மதுரையில் இருந்து சென்னைக்கு 38 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன..
இருப்பினும் கூட்டம் அலை மோதியதால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இதனை பயன்படுத்தி கட்டண கொள்ளையில் ஈடுபட்டனர். இதனால் சிலர் தங்களது பயணத்தை மறு நாளைக்கு தள்ளி வைத்தனர். அவசரமாக செல்ல வேண்டியவர்கள் மட்டும் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, அரசு பஸ்களை விட ஆம்னி பஸ்களில் வசதிகள் மற்றும் பயணம் சொகுசாக இருப்பதால் ஆம்னி பஸ்களில் விரும்பி பயணம் செய்கிறோம். மேலும் அது குறித்த நேரத்தில் செல்கிறது .வழக்கமாக ரூ.200-லிருந்து ரூ.300 வரை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். ஆனால் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு 3 மடங்கு அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது எவ்விதத்தில் நியாயம். இதனை அரசு முறைபடுத்த வேண்டும் என்றனர்.
இதே போல சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சென்ற ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.