For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவோணம் வந்தல்லோ... அத்தப்பூ கோலம் போட்டல்லோ.. களை கட்டிய ஓணம் திருவிழா!

மலையாள மக்களின் அறுவடை திருநாளான ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் தங்களின் அறுவடை திருநாளான ஓணம் பண்டிகையை இன்று கோலாகலமாக கொண்டாடினர்.

ஒவ்வொரு மக்களும் தங்கள் மாநில சீதோஷ்ண நிலைக்கேற்ப பயிரிடும் பயிர்களை அறுவடை செய்யும் திருநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையின் போது நாடெங்கும் உள்ள மலையாளம் பேசும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மகாபலியின் அகங்காரம்...

மகாபலியின் அகங்காரம்...

கேரள மக்களின் உன்னதமான பண்டிகைத் திருநாள்தான் ஓணம் பண்டிகை ஆகும். மகாபலி சக்கரவர்த்தி கொடை, அறம், வீரம் இவற்றால் புகழ் பெற்றாலும் தன்னை நாடி வருவோருக்கு தன்னால் தர இயலாதது ஒன்றுமே இல்லை என்று தலைகணம் கொண்டிருந்தார்.

வாமன அவதாரம்

வாமன அவதாரம்

மகாபலியின் கர்வத்தை அடக்குவதற்காகத் திருமால் வாமன அவதாரம் எடுத்து, தன் காலால் அளப்பதற்கு மூன்று அடி நிலம் வேண்டும் என்று கேட்டார். எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று சக்கரவர்த்தி கூறினார். காரணம் வாமன என்ற குள்ள மனிதராக திருமால் அவதாரம் எடுத்திருந்ததை அறியாமல் மிகவும் ஏளனமாக நிலத்தை எடுத்துக் கொள் என்றார் மகாபலி.

திருமால் விஸ்வரூபம்

திருமால் விஸ்வரூபம்

அப்போது, அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார், மகாபலி சக்கரவர்த்தியிடம் இது திருமாலின் வேலை, இந்த சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால், கூறியது கூறியதுதான் என்றார் மகாபலி. திருமால் விஸ்வரூபம் எடுத்து ஓரடியால் மண்ணையும் மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது? என்று கேட்டபோது, தன் தலை மீது வைக்கச் சொன்னார் மகாபலி.

பாதாள உலகம்

பாதாள உலகம்

மகாபலி சக்கரவர்த்தி அழிய நேரிட்டாலும் அவருக்கு, சொர்க்கத்திற்கு நிகராகப் பாதாள உலகத்தைப் படைத்து அங்கு அனுப்பினார் திருமால். அப்போது, ஆண்டுககு ஒருமுறை தான் வந்து தன்னுடைய கேரளத்து மக்களைப் பார்க்க வேண்டும என்று மகாபலி சக்கரவர்த்தி கேட்ட வரம் அளிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை

ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை

ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின் போது மகாபலி பூலோகத்துக்கு வருகிறார் என்று நம்பப்படுகிறது. அவரை வரவேற்க மலையாள மக்கள் தங்கள் வாசல்களில் 10 நாள்களும் அத்தப்பூ கோலம் மிட்டு மகாபலியை வரவேற்பதாக ஐதீகம்.

விதவிதமான உணவு பொருள்கள்

விதவிதமான உணவு பொருள்கள்

64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது.

படகு போட்டி

படகு போட்டி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10-ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

கோயில்களில் வழிபாடு

கோயில்களில் வழிபாடு

மலையாள மக்கள் தங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவர். அப்போது தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வர். அந்த வகையில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மலையாள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு, வகைவகையான உணவுகளை தயார் செய்து கோயில்களில் வழிபாடு நடத்தினர்.

English summary
Onam celebrated throughout the world. They celebrates this festival as harvesting festival. They also believe that their king Mahabali Chakraborty visits their home in Onam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X