”தங்கத்திரு ஓணம் வந்தல்லோ”- ஓலன், காளனுடன் “ஓணம் சத்யா” சாப்பிட எல்லாரும் ரெடியா?
சென்னை: கேரள மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து எல்லா மலையாள மக்கள் வீட்டிலும் ஓணம் விருந்தான "சத்யா" வாசனை தூள் பறக்கும்.
மகாபலி சக்கரவர்த்தி தன் தேசத்து மக்களை பார்க்க வருவதாக கருதப்படும் இந்த நாளில் அவரை வரவேற்கும் விதமாக 9 நாட்களாக வீடுகளின் முன்பு பூக்களால் கோலமிட்டு கொண்டாடுவார்கள்.
திருவோண நாளான நாளை மலையாள தேசத்து மக்கள் வீடுகளில் சந்தோஷம் பொங்கும். காலையில் எழுந்து குளித்து ஆண்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையும், பெண்கள் ஜரிகை போட்ட வெள்ளை சேலையும் அணிந்து கோவிலுக்கு சென்று வருவார்கள்.

21 வகையான உணவுகள்:
அதன்பிறகு வீடுகளில் ஓண விருந்து தயாராகும். முழுக்க முழுக்க சைவத்தில் தயாராகும் இந்த "சத்யா" உணவில் 21 வகை உணவுகள் இடம் பெறும்.

ஓலனும், காளனும்:
குறிப்பாக "ஓலன்" எனப்படும் பூசணிக்காய், காராமணி, தேங்காய் கலந்த தொக்கு, காளன் எனப்படும் சேனைக் கிழங்கில் தயாராகும் ஒருவித தொக்கு, எட்டுவிதமான காய்கறிகளை தேங்காய் கலந்து வேக வைத்து தயிர் கலந்து தயாரிக்கப்படும் அவியல், இஞ்சிபுளி, ஊறுகாய், தக்காளி பச்சடி, பொரியல்கள், சிப்சில் வெல்லம் கலந்தது உள்பட 3 வகை உள்பட கூட்டு வகைகள் இடம்பெறும்.

சத்யா விருந்தின் சுவை:
மேலும், பருப்பு, சாம்பார், ரசம், மோர், இருவகை அப்பளங்கள், அடை, பருப்பு, தேங்காய் பால் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் 3 வகை பாயாசங்கள் உள்பட 21 வகை உணவுகள் இடம்பெறும்.

வயிறார உணவு:
விருந்து தயாரானதும் முதலில் வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டு இருக்கும் விளக்கின் முன்பு படையலிடப்படும். பின்னர் அனைவருக்கும் பரிமாறப்படும்.

தலை வாழை விருந்து:
ஒவ்வொருவருக்கும் தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறுவார்கள். சென்னையில் வசிக்கும் கேரள மக்கள் விருந்து தயாரிப்பதற்கான பொருட்களை இன்று ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சென்னையில் உள்ள பிரபலமான கேரள ஓட்டல்களிலும் கேரள பாரம்பரிய ஓணம் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications