Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்த குவியும் மக்கள்- பேக்கரும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

பேக்கரும்பு (ராமேஸ்வரம்): மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரம், பேக்கரும்பு நல்லடக்க இடத்தில் தினசரி ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து வணங்கி வருகின்றனர்.

பேக்கரும்பு என்ற இடத்தில்தான் கலாமின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. இந்த இடம் இப்போது மக்களால் விரும்பப்படும் புனித்த தலம் போல மாறி விட்டது. தினசரி மக்கள் கூட்டம் குவிகிறது.

ஜூலை 30 ஆம் தேதி இந்த இடத்தில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. ஜூலை 27 ஆம் தேதி அவர் மக்களை விட்டு மறைந்தார்.

One India Special: Thousands throng Kalam’s kabar at Rameshwaram

கடமையாக நினைக்கும் மக்கள்:

பேக்கரும்பு இப்போது மக்களின் புனிதத் தலமாக மாறியுள்ளது. மறைந்த மக்களின் ஜனாதிபதியின் உடல் நல்லடக்க ஸ்தலத்தைக் காண்பது தங்களின் கடமை என்று மக்கள் நினைக்கிறார்கள். இதனால் பல்வேறு ஊர்களிலிருந்தும் இங்கு மக்கள் அலை அலையாக வருகிறார்கள்.

பெருமளவில் கூடும் கூட்டம்:

இதுகுறித்து கலாமின் பேரனும், கலாம் குடும்ப செய்தித் தொடர்பாளருமான ஷேக் சலீம் கூறுகையில், "ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் அனைவரும் தவறாமல் அப்துல் கலாம் உடல் நல்லடக்க இடத்திற்கும் வருகை தருகிறார்கள். வார இறுதி நாட்களில் பெருமளவில் கூட்டம் கூடுகிறது. பலர் துக்கம் தாங்காமல் இன்னும் அழுவதைப் பார்க்க முடிகிறது" என்றார்.

வணங்கிச் செல்லும் மக்கள்:

இந்த இடத்தில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் 24 மணி நேரமும் யாராவது வந்தவண்ணம் உள்ளனராம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இங்கு வராத மக்களே கிடையாது. தங்களது அன்புக்குரியவர் அமைதியாக துயில் கொள்ளும் இந்த இடத்தை அவர்கள் வந்து பார்த்து வணங்கிச் செல்கின்றனர்.

பெருகி வழியும் அன்பு:

இதுகுறித்து அங்கு காவலுக்கு நிற்கும் போலீஸார் கூறுகையில், "நாட்டில் வேறு எந்தத் தலைவர் மீதும் மக்கள் இந்த அளவுக்கு அன்பு வைத்திருப்பார்களா என்று தெரியில்லை. இங்கு வருபவர்கள் அவ்வளவு மரியாதை வைத்துள்ளனர் கலாம் மீது" என்றனர்.

விரைவில் நினைவிடம்:

சலீம் மேலும் கூறுகையில், "ராமேஸ்வரம் வரும் மக்கள் தவறாமல் கலாம் நல்லடக்க இடத்திற்கும், அவரது வீட்டிற்கும் சென்றுதான் தங்களது பயணத்தை முடிக்கின்றனர். கலாமின் வீடு தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. பேய்க்கரும்பில் விரைவில் கலாம் அவர்களுக்கு முழுமையான முறையான நினைவிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

வீட்டிற்குள் அனுமதியில்லை:

இதற்கிடையே, டெல்லியில் உள்ள கலாம் கடைசியாக வசித்த 10, ராஜாஜி மார்க் வீட்டுக்கும் பலர் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். பலர் பூங்கொத்துகளுடன் வருகிறாரக்ள். பலர் கலாம் இருந்த அறைகளைப் பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் வீட்டுக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை .

ஹப்பா 2000 நிகழ்ச்சிகள்:

கலாம் இங்கு வைத்திருந்த நூலகத்தில் 3000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதில் பல அரிய வகை புத்தகங்கள். கலாம் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் 20,000 நிகழ்ச்சிகளுக்கு மேல் கலந்து கொண்டுள்ளாராம். இது மிகப் பெரிய, மலைக்க வைக்கும் தகவலாக உள்ளது. இருப்பினும் இது தனிப்பட்ட முறையில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மீளாத் துயரம்:

கலாமின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களான ஆர்.கே.பிரசாத், ஹாரி ஷெரிடன் ஆகிய இருவரும் இன்னும் கூட கலாம் மறைந்த துயரத்திலிருந்து மீளாதவர்களாக உள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு அறிவிப்பு:

தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் அடக்க ஸ்தலத்தின் பொறுப்பை ராமேஸ்வரம் போலீஸார் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து ராமேஸ்வரம் டி.எஸ்.பி முத்துராமலிங்கம் கூறுகையில், "நல்லடக்க இடத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இங்கு கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்காலிக கூடாரம் போட்டுள்ளோம். 24 மணி நேரமும் அங்கு பாதுகாப்பு தரப்படுகிறது" என்றார்.

விளக்கொளி வசதியும்:

நல்லடக்க ஸ்தலத்தைச் சுற்றிலும் தற்காலிகக் கடைகள் போடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் வருகிற மக்களின் வசதிக்காக குடிநீர் வசதி மட்டும் செய்யப்பட்டுள்ளது. மேலும் நல்லடக்க இடத்தில் விளக்கொளி வசதியும் செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி மேலும் கூறுகையில், கலாம் நல்லடக்க இடத்தை பாதுகாப்பதை பெருமையாக கெளரவமாக கருதுகிறோம். அவருக்காக சேவை செய்ய நாங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டராக உணர்கிறோம் என்றார் நெகிழ்ச்சியுடன்.

மத்திய அரசின் விருப்பம்:

இதற்கிடையே, கலாமின் சமூக வலைதளங்களைப் பராமரிப்பது யார் என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில் அதுகுறித்து மத்திய அரசு அமைதி காத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கியிருக்கவும் மத்திய அரசு விரும்புகிறதாம்.

அமைதி காக்கும் அரசு:

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் ஒன் இந்தியாவிடம் தெரிவிக்கையில், "இது மிகவும் உணர்ச்சிகரமானது. கலாம் குடும்பத்தினர் இன்னும் துக்கம் அனுசரித்து வருகின்றனர். எனவே இதில் மத்திய அரசு அமைதி காக்க விரும்புகிறது. டெல்லியில் கலாம் அறிவு சார் மையம் அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல கோரிக்கைகளும் வந்துள்ளன. பிரதமரைச் சந்திக்க கலாம் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் உணர்வுக்கு மரியாதை:

இருப்பினும் அவசரமாக மத்திய அரசு முடிவெடுத்து விட முடியாது. மக்களின் உணர்வுகள் மற்றும் கோரிக்கைகளை மட்டும் வைத்து இதைச் செய்ய முடியாது. உரிய முறையில் கலாம் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர். கலாம் அவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி 15 ஆவது நாள் காரிய நிகழ்ச்சிகளை கலாம் குடும்பத்தினர் நடத்தினர். அடுத்து 40வது நாள் நிகழ்ச்சி செப்டம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ளது.

அரசாங்கம் திட்டமிட வேண்டும்:

இந்த நிலையில் கலாமுடன் இணைந்து பல புத்தகங்களை எழுதியுள்ளவரும், அவருடன் நீண்ட காலம் பழகியவருமான அருண் திவாரி ஒன் இந்தியாவிடம் பேசுகையில், "அனைவரும் மிகவும் நிதாமாக இருக்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும். எந்த முடிவுக்கும் வேகமாக வரக் கூடாது. அரசாங்கத்திற்குத் திட்டமிடுவதற்கு அவகாசம் தர வேண்டும். இப்போதுதான் நாடாளுன்றக் கூட்டம் முடிந்துள்ளது. பிரதமர் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அரசுக்கு வேறு பல முக்கிய அலுவல்கள் உல்ளன. கலாமுக்கு நிச்சயம் பொருத்தமான ஏதாவது ஒன்றை அரசு செய்யும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+