திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு.. வெளியே வர விடாமல் தடுக்க சதி?
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழர்களை மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக கொன்று குவித்தது.

தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய கொலை வெறி இனவெறித் தாக்குதல்களை இன்னும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்களை மானபங்கப்படுத்தி, நிர்வாணப்படுத்தி கொடூரமாக கொன்றனர்.
மே 17ம் தேதியன்று நடந்த இந்த கொடூர இனஅழிப்பு நாளை, ஆண்டுதோறும் சென்னையில் மே 17 இயக்கம் அனுசரித்து வருகிறது சென்னை மெரினாவில் கடந்த 7 ஆண்டுகளாக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இதற்கு எந்தத் தடையும் ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த ஆண்டு திடீரென மெரீனாவில் கூடுவதற்கு போலீஸார் தடைவிதித்தனர். அதையும் மீறி மே 17 இயக்கத்தினர் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, அருண், டைசன், இளமாறன் உள்ளிட்ட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து தமிழர்களை அதிர வைத்தனர். இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எதிராக திருமுருகன் காந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமுருகன் காந்தி மீது வழக்கு மேல் வழக்காக போடுவது போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை ஒடுக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. மேலும் திருமுருகன் காந்தியை வெளியே வர விடாமல் தடுக்க போடப்படும் சதியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications