பன்றிக் காய்ச்சல் தாக்கி பெண் உயிரிழப்பு! சென்னையில் பலி எண்ணிக்கை 2ஆனது!!
சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே சீனிவாசன் என்பவர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பதால் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் வசித்து வந்த சரஸ்வதி என்பவர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து சரஸ்வதிக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சரஸ்வதி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சரஸ்வதி குடும்பத்தினர் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகளை சைதாப்பேட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினார்.
ஆந்திரா, தெலுங்கானாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலர் பலியாகி வரும் நிலையில் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications