பாஜகவின் புதிய ஸ்லீப்பர் செல்களாக 33 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. எடப்பாடிக்கு 'குடைச்சல்'
பாரதிய ஜனதாவின் புதிய ஸ்லீப்பர் செல்களாக 33 அதிமுக எம்.எல்.ஏக்கள் வளைக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவி உள்ளிட்டவை இந்த கோஷ்டி வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் புதிய ஸ்லீப்பர் செல்களாக 33 அதிமுக எம்.எல்.ஏக்கள் வளைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் கோர திட்டமிட்டுள்ளது இந்த கோஷ்டி.
ஜெயலலிதா இல்லாத அதிமுகவை பாஜக பல துண்டுகளாக சிதைத்து வருகிறது. ஏற்கனவே ஓபிஎஸ், எடப்பாடி, தினகரன், திவாகரன் கோஷ்டிகளாக அதிமுக உடைந்து போயுள்ளது.
33 எம்.எல்.ஏக்கள்
இப்போது ஜாதி ரீதியாக 33 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டிருக்கிறது பாஜக. இதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
அமைச்சரவை பிரதிநிதித்துவம்
அந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநித்துவம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியே பாஜக வளைத்து வைத்துள்ளதாம். பாஜகவின் உத்தரவைத் தொடர்ந்துதான் அண்மையில் இந்த எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.
துணை முதல்வர்
தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும்; அதிகபட்சமாக துணை முதல்வர் பதவியும் வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து நிம்மதியை கெடுப்பதுதான் பாஜகவின் ப்ளான். அதாவது எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு எம்.எல்.ஏ.க்கள் அணி திரளுவதற்கு எதிரான ஆயுதமாக இவர்களை பயன்படுத்தப் போகிறதாம் பாஜக.
அடுத்த அணி?
இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்னும் கூடுதல் குடைச்சலை கொடுக்கும் வகையில் அடுத்த அணியையும் ரெடி செய்ய காத்திருக்கிறதாம் பாஜக. எந்த திசையில் இருந்து எப்போது கலகக் குரல் வெடிக்குமோ என்கிற பீதி அதிமுகவில் நீடிக்கிறது.