63 வயது மூதாட்டி பலாத்காரம்- மேலும் ஒரு சிறுவன் கைது! 6 பெண்களை கொன்று வீசியதாகவும் திடுக் தகவல்
63 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ததாக கன்னியாகுமரியில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நாகர்கோவில்: ஆரல்வாய்மொழியில் 63 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதில் தொடர்புடைய 3 பேரிடம் போலீஸ் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் 63 வயது மூதாட்டியை 17 வயது சிறுவர்கள் கொண்ட கும்பல் கூட்டாக பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கன்னியாகுமரி போலீசாருக்கு சவாலாக இருந்த இந்த பலாத்கார சம்பவத்தில் முதலில் 17 வயது சிறுவன் சிக்கினான்.
கூட்டாளிகள் 4 பேர்
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்களால் போலீசாரே அதிர்ந்து போயினர். அவனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்துதான் கூட்டு பலாத்காரம் செய்ததாக அச்சிறுவன் கூறியிருக்கிறான்.
3 பேரிடம் விசாரணை
இதையடுத்து தலைமறைவாக 4 பேரில் ஒருவன் கைது செய்யப்பட்டான். மேலும் 3 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மூதாட்டிகளுக்கு குறி
இந்த விசாரணையில் குமரி மாவட்டத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பலாத்காரம் செய்ததும் 6 பெண்களை கொலை செய்திருப்பதாகவும் சிறுவர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் அதிர்ந்து போன போலீசார் அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஸ்டடியில் விசாரணை
மேலும் கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த விசாரணையில் இன்னும் என்ன என்ன திடுக்கிடும் தகவல் வெளியாகுமோ?