இன்னொரு ஆணவக் கொலை மிரட்டல்... காப்பாற்றக் கோரி தலித் இளைஞர் மனு
கரூர்: ஆணவக் கொலை மிரட்டலுக்கு ஆளாகியிருக்கும் தனது காதலியை மீட்கக் கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கொடிகம்புதூரை சேர்ந்த வினோத் என்பவரும், புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதியைச் சேர்ந்த பிரியங்காவும் 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாகத் தெரிகிறது. 24 வயதாகும் ப்ரியங்கா எம்எஸ்ஸி பிஎட் படித்துள்ளார்.
காதலுக்கு பிரியங்காவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தற்போது பிரியங்காவை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
பிரியங்காவை பெற்றோரிடம் இருந்து மீட்குமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வினோத் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா மொபைல் மூலம் ஒரு புகாரும் அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னை அடித்தே கொன்றுவிட பெற்றோர் முடிவு செய்திருப்பதாகவும், உடனடியாக காப்பாற்றி காதலருடன் சேர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.