பீடிக்கு நெருப்பு பெட்டி கேட்டார் ஒருவர்.. அதற்குப் பிறகு நடந்தது அதி பயங்கரம்!
தீப்பெட்டி கேட்டவரை கொலை செய்தவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
திருப்பூர்: எது எதுக்கு கொலை செய்றதுன்னு ஒரு நியாயம், தர்மம் வேண்டாமா? ஒரு உயிரோட மதிப்பு அவ்ளோ கேவலமாகவும், மலிவாகவும், போயிடுச்சா என்ன?
பல்லடம் அருகே உள்ள பகுதி சேடபாளையம் செல்வலட்சுமி நகர். இங்கு வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. வயது 31. இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலைக்கு எங்கேயும் செல்வதில்லை. தினமும் தண்ணி அடித்து விட்டு, பீடி பிடித்துக் கொண்டு ஊர் சுற்றி வருவதுதான் இவரது முக்கியமான வேலையே.
தீப்பெட்டி இருக்கா?
அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். வயது 40. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். விசைத்தறி நெய்யும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி பீடி பிடிக்க வேண்டும், அதற்காக குணசேகரனிடம், தீப்பெட்டி இருக்கா என்று கேட்டுள்ளார். ஆனால் குணசேகரன் தீப்பெட்டி இல்லை என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார்.
சரமாரி தாக்குதல்
தீப்பெட்டி கொடுக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன் வீட்டின் ஜன்னல் மீது கண்ணாடி கற்களை சரமாரியாக வீசினார். இதில் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன. வீட்டிற்குள் கற்கள் வந்து விழவும் அதிர்ச்சியடைந்த குணசேகரன் வெளியே வந்தார். அங்கே கிருஷ்ணமூர்த்தி கைகளில் கற்களை அள்ளிக் கொண்டு ஆவேசத்துடன் நின்றிருந்ததை கண்டதும், காரணம் கேட்டார். இது வாக்குவாதமாக முற்றியது.
மரக்கட்டையால் அடித்தார்
இந்த தகராறில் குணசேகரனின் மகன் பிரதீப் என்பவரும் சேர்ந்து கொண்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குணசேகரன் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து கிருஷ்ணமூர்த்தியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் வலி பொறுக்க முடியாமல் மயங்கி சரிந்தார் கிருஷ்ணமூர்த்தி. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
கம்பி எண்ணுகிறார்கள்
ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரனையும், அவரது மகனையும் கைது செய்தனர். ஒரு உதவாத விஷயத்துக்காக உயிரையே கொல்லும் அளவுக்கு துணிந்த அப்பாவும், மகனும், தற்போது கோவை மத்திய சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.