வேல்முருகன் கைது.. பரங்கிப்பேட்டை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தீக்குளித்து தற்கொலை
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

கடலூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி பரங்கிப்பேட்டை அருகே அக்கட்சியின் நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை வேல்முருகன் சந்திக்க சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் விக்கிரவாண்டியில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் வேல்முருகனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

அப்போது தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து, சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் என்எல்சி போராட்ட வழக்கில் வேல்முருகனை நெய்வேலி போலீசார் கைது செய்தனர். தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வேல்முருகனின் கைது நடவடிக்கையை கண்டித்து அவரது கட்சி நிர்வாகி ஒருவர் நேற்றிரவு தீக்குளித்தார். கடலூர் மாவட்டம் பெரியாண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் வயது 30, தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்துவந்தார். வேல்முருகன் கைது செய்யப்பட்டதால் இவர் மிகுந்த கவலையுடன் இருந்ததாகவும், வேல்முருகனின் பேட்டியை டி.வி. யில் பார்த்தபோது தேம்பி, தேம்பி அழுததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு கட்சியின் கொடிகம்பம் அருகே கையில் மண் எண்ணை கேனுடன் சென்ற ஜெகன் சென்றார் வேல்முருகனை விடுதலை செய்ய முழக்கமிட்டவாறு உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாமல், அவரை கருகிய நிலையில் கடலூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெகன் இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த ஜெகனுக்கு அஞ்சு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications