மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி நாகையைச் சேர்ந்தவர் பலி... உறவினர்கள் சோகம்
மெக்கா : கூட்ட நெரிசலில் சிக்கி 2 இந்தியர்கள் உள்ளிட்ட 750 பேர் பலியான நிலையில், இந்த விபத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹஜ் புனித யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மினாவில் கூடியிருந்த போது திடீரென நெரிசல் ஏற்பட்டது. மினாவில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது இந்த நெரிசல் நிகழ்ந்தது.
இதனால் யாத்ரீகர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 750 பேர் உடல் பலியாகினர். மேலும் 850-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலியானவர்களில் இந்தேனேஷியா, மற்றும் மலேஷியா நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.பி. ஜான் என்ற 60 வயது முதியவரும், கேரள மாநிலத்தின் கொடுங்கலூரை சேர்ந்த முகமது என்பவரும் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெக்கா விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரையை சேர்ந்த சம்சுதீன் முகமது என்பவர் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.