வாக்களிக்க பணம் வாங்கினால் ஓராண்டு சிறை!!
சென்னை: வாக்களிக்க வேட்பாளரிடம் பணம் வாங்கினால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தண்டனை விதி 171-பி பிரிவின்படி, வாக்களிக்க பணம், பொருள் வழங்கினால் அல்லது பெற்றால் அந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு வேட்பாளரை அல்லது வாக்காளரை அல்லது ஏதேனும் ஒரு நபரை எந்த வகையிலாவது அச்சுறுத்தினாலும் மேற்கண்ட தண்டனையே விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கையூட்டு அளிப்பவர், பெறுபவர் மீது வழக்குகளைப் பதியவும், வாக்காளர்களை அச்சுறுத்துகிறவர்கள், கட்டாயப்படுத்துகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புகார்களை பெறுவதற்காக 1800 425 7012, 044-2530 3825, 94451 90473 என்ற எண்களில் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்," என அறிவிக்கப்பட்டுள்ளது.