சிங்கப்பூரை பற்றி இப்படி பேசாதீர்கள் ப்ளீஸ்.. சிங்கப்பூரிலிருந்து கமலுக்கு ஒரு கடிதம்
சிங்கப்பூரில் ஒர் இரக்கமுள்ள சர்வாதிகாரம் இருப்பதாகவும், மேலும் நாம் அதை விரும்புகிறோமா என்று கமல்ஹாசன் கேட்டுள்ளார்.
சென்னை: சிங்கப்பூரை சர்வாதிகார நாடு என நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கூறி வருகிறார்கள். அதேபோல நமது சிங்கப்பூர் வாசகர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரை போன்ற இரக்கமுள்ள சர்வாதிகாரமும் இந்தியாவுக்கு வேண்டாம் என்று, கமல் சமீபத்தில் டிவிட்டரில் கூறியிருந்தார். சிங்கப்பூரில் தினமும் நள்ளிரவில் தேசியகீதம் இசைக்கப்படுவதுபோல் நமது நாட்டிலும் தூர்தர்ஷனில் பின்பற்றலாம். வெவ்வேறு இடங்களில் எனது நாட்டுப்பற்றை நிரூபிக்க பரிசோதிக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம் என்று கமல் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு டிவிட்டில் சில விமர்சகர்களின் கருத்துப்படி, சிங்கப்பூரில் ஒர் இரக்கமுள்ள சர்வாதிகாரம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நாம் அதை விரும்புகிறோமா என்று கேட்டுள்ள கமல்ஹாசன் தயவு செய்து வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வாசகர் ஆதங்கம்
நமது சிங்கப்பூர் வாசகரான ஜெயகுமார் என்பவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது: சிங்கப்பூரில் சர்வாதிகாரம் என்று குறிப்பில் உணர்த்திருக்கும் மதிப்பிற்குரிய கமல் அவர்களே இங்கு இருக்கும் சுதந்திரமும், பயமற்ற எண்ணமும், மனிதர்களை மதிக்கும் விதமும், நம் ஜனநாயக நாட்டில் இருப்பதாக உணர்கீறீர்களா?

வாழவிட்டுள்ளது
என் நாட்டினை குறைசொல்லவில்லை. மேம்படவேண்டும் என்பதே என் திண்ணம் . வாருங்கள் இங்கு அரசாங்கம் மனிதனை மனிதனாய் வாழ விட்டிருக்கிறது என்பதனை காட்டுகிறேன் .

களம் காணுங்கள்
உங்களை மதிக்கிறேன் உங்களின் உணர்வுகளையும் .நம் ஜனநாயகம், ஜனங்களை மதிக்கிறதா சொல்லுங்கள்? டிவிட்டர், பேஸ்புக்கில் மட்டும் நின்றுகொள்ளாதீர்கள். களம் இறங்குங்கள்.

எப்போதுமே ஒப்பீடு
நம் நாட்டில் அரசியல்வாதிகளும், நடிகர்களும் எதற்கெடுத்தாலும் இந்தியாவை சிங்கப்பூரோடு ஒப்பிடுவதை கேட்கும்பொழுது சிங்கப்பூரின் வளர்ச்சியில் இன்னும் ஒரு துளி கூட நம் நாடு அடையவில்லை என்பதே என் மதிப்பீடு.

தமிழை நேசித்த நாடு தோற்காது
தமிழனின் மூளையும் உழைப்பையும் உணர்ந்து வளர்ந்தது சிங்கப்பூர் . தமிழை அழிக்க சில கூட்டமே நமது நாட்டில் இருக்கிறது. அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் சில 'தமிழ் வியாதிகள்' . ஆனால், தமிழை நேசித்த நாடு தோற்றதில்லை. தமிழும் தோற்க போவதில்லை . இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications