முதல்வர் பதவி: ஓபிஎஸ்-க்கு 30.2%; தீபா- 14.29%; சசிகலா- 2.09% மட்டுமே ஆதரவு- ஒன் இந்தியா தமிழ் சர்வே
ஒன் இந்தியா தமிழ் இணையதளம் நடத்திய கருத்து கணிப்பில் முதல்வர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வமே பொருத்தமானவர் என 30.2% தெரிவித்துள்ளனர். சசிகலாவுக்கு 2.09% பேர் மட்டுமே ஆதரவு தந்துள்ளனர்.
சென்னை: முதல்வர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்ற நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் நடத்திய சர்வேயில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு 30.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் சசிகலாவுக்கு வெறும் 2.09% பேர் மட்டுமே ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு 14.29% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். தற்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவே முதல்வராக வேண்டும் என அமைச்சர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் வாசகர்களிடம் "முதல்வர் பதவிக்கு யார் பொருத்தமானவர்' என ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் விவரம்:
ஓபிஎஸ்-க்கு ஆதரவு
தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 30.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 27,931 பேர் பங்கேற்ற இந்த சர்வேயில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு 8,434 வாக்குகள் கிடைத்துள்ளன.
தீபாவுக்கு 2-வது இடம்
அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவுக்கு 14.29% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 3,990 பேர் தீபாவை ஆதரித்துள்ளனர்.
சசிகலாவுக்கு 2.09%தான் ஆதரவு
அதிமுக பொதுச்செயலராகவும் தமிழக முதல்வராகவும் அதிமுக நிர்வாகிகளாள் முன்மொழியப்படுகிற சசிகலாவுக்கு வெறும் 2.09% பேர் மட்டுமே ஆதரவு தந்துள்ளனர். மொத்தம் 585 வாக்குகள்தான் சசிகலாவுக்கு கிடைத்திருக்கிறது.
தம்பிதுரை
தம்பிதுரைக்கு 2.02% பேரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு 0.92% பேரும் ஆதரவு தந்துள்ளனர். தம்பிதுரைக்கு 565; எடப்பாடி பழனிச்சாமிக்கு 257 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய அமோக ஆதரவு
நாம் முன்வைத்த "ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதே சாலச்சிறந்தது" என்ற ஆப்ஷனுக்கு மிக அதிக அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. 50.48% பேர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யலாம் என கூறியுள்ளனர். மொத்தம் பதிவான 27,931 வாக்குகளில் 14,100 பேர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய ஆதரவு தெரிவித்துள்ளனர்.