கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்: ஜிகே வாசன்! #கதிராமங்கலம்
வாழ்வாதாரத்தை கெடுக்க நினைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை: வாழ்வாதாரத்தை கெடுக்க நினைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார். போராட்டம் நடத்தும் மக்களை போலீசாரை கொண்டு அடக்குவது நல்ல அரசுக்கான அடையாளம் அல்ல என்றும் அவர் கூறினார்.
ஓஎன்ஜிசி நிறுவனம் புதிதாக குழாய்களை பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் அங்கு தொடர்ந்து தனது பணிகளை மேற்தெகண்டு வருகிறது.
புதிதாக எந்த திட்டம் செயல்படுத்த வில்லை, பராமரிப்பு பணிகள்தான் நடைபெறுவதாக ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிகே வாசன் சந்திப்பு
இந்நிலையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கதிராமங்கலம் கிராமத்துக்கு சென்று கிராம மக்களை சந்தித்தார். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக கருத்துகளை கேட்டறிந்தார்.

மாசு நீரை குடித்த வாசன்
அப்போது கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி வரும் மாசு கலந்த குடிநீரை ஜி.கே.வாசனிடம் கொடுத்தனர். அதை வாங்கிக் குடித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அரசு திணிக்கக்கூடாது
அவர் கூறியதாவது, கதிராமங்கலத்தில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையைவிட, இங்கு குவிக்கப்பட்டுள்ள போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றார். மக்கள் விரும்பாத திட்டத்தை அரசு திணிக்க கூடாது என்றும் ஜிகே வாசன் வலியுறுத்தினார்.

நல்ல அரசுக்கான அடையாளமல்ல
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதால் குடிநீர் பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூறிய அவர் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இதுபோன்ற பணிகளை பாலைவனத்தில் மேற்கொள்ள வேண்டுமே தவிர, குடியிருப்புகள், விவசாய நிலங்களில் மேற்கொள்ள கூடாது என தெரிவித்தார். இதை தட்டிக்கேட்கும் கிராம மக்களை போலீசாரை கொண்டு அடக்குவது நல்ல அரசுக்கான அடையாளம் இல்லை என்றும் ஜிகே வாசன் சாடினார்.

வெளியேற்றப்பட வேண்டும்
கதிராமங்கலத்தில் உள்ள மக்கள் அமைதியாக, செழிப்பாக வாழ்ந்தவர்கள் என்ற அவர், மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க நினைக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனக் கூறினார். இங்கு ஓ.என்.ஜி.சி. மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஜிகே வாசன் வலியுறுத்தினார்.

தமாகா துணை நிற்கும்
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் கதிராமங்கலம் பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு த.மா.கா. துணை நிற்கும் என்றும் அவர் ஜிகே வாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications