கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு பெரும் நஷ்டம் அடைந்த விவசாயிகள்
நெல்லை: கூடுதல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைத்த வெங்காயம் அழுகிவிட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கீழப்பாவூர் பகுதியில் விளைந்த வெங்காயத்தை விவசாயிகள் பாதுகாப்பாக தேக்கி வைத்திருந்தனர். கீழப்பாவூர், குரும்பலபேரி, மேலப்பாவூர், ஆவுடையனூர். திப்பணபேரி, பெத்தாடார்பட்டி, மகிழ்வண்ணாநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிர் செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பல்லாரி நாற்று நடவிய நிலையில் 45 நாட்களில் பிடிங்கி நாற்று நட வேண்டும். ஆனால் அப்போது கோடை மழை பெய்ததால் நாற்று நடவை மேலும் 15 நாட்களுக்கு தள்ளி வைத்தனர். இதனால் நிலத்தை வெங்காய சாகுபடிக்கு பக்குவப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் நாற்றில் பூச்சான் நோய் தாக்குதல் ஏற்பட்டு சரியாக விளையவில்லை. இதனால் பல விவசாயிகள் பல்லாரி நாற்று கிடைக்காமல் நேரிடையாக விதைகளை விதைத்தனர். ஆனால் இது காலதாமதம் என்பதால் தற்போது அறுவடை செய்ய முடியவில்லை. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அவை நாசமாகி வருகிறது.
பாவூர்சத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாரி கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையானது. இந்த நிலையில் வெளிநாடு மற்றும் வெளி மார்க்கெட்டில் இருந்து பல்லாரி அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. இதனால் இப்போது பல்லாரி கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரணத்தால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.