பழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம் - என்னென்ன கட்டுப்பாடுகள்
பழனி மலை முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் 10 வயதிற்கு உட்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை 5500 பேரை தாண்டியுள்ளது. இன்று முதல் கோவில் திருவிழாக்கள், மத விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூட ஊரடங்கு அமலாகியுள்ளது.

இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பாற்றாதவர்கள், முக கவசம் அணியாதவர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை.
பக்தர்கள் மின்சார இழுவை ரயில், ரோப்கார் மூலமாக இரவு 7 மணி வரைக்கும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இரவு 7.45மணி வரை மேலிருந்து கீழேஇறங்க அனுமதிக்கப்படுவார்கள். கோவிலில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவும். கோவிலுக்குள் எச்சில் துப்பக்கூடாது. கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
கோவிலில் பூ, பழம் அர்ச்சனை எதுவும் கிடையாது. சாமி சிலையை தொட்டு வணங்க அனுமதியில்லை. அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடாது எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனியில் மிக முக்கிய திருவிழாவான பங்குனி உத்திர திருவிழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளன.












Click it and Unblock the Notifications