சென்னை ரயில் நிலையங்களில் 'உவ்வே' கழிப்பறைகள்... பயணிகள் அவதி!
சென்னை: சென்னை ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை ஆய்வு செய்த சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர், அவற்றில் பராமரிக்கப் படாமல் மோசமான நிலையில் உள்ள கழிப்பறைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், வழக்குத் தொடரப் போவதாக எச்சரித்துள்ளனர்.
சென்னையில், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான இடங்களில் ரயில் நிலையங்களும் ஒன்று. அத்தகைய இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவையான கழிப்பறைகள் எவ்வாறு பராமரிக்கப் படுகின்றன என நேற்று முன்தினம், சென்னையில் உள்ள 47 ரயில் நிலையங்களில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - ஆவடி ஆகிய வழித்தடங்கள் இடையே உள்ள, 47 ரயில் நிலையங்களில் மூன்று குழுக்களாக சென்று அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட ஒவ்வொரு குழுவும் ரயில் நிலையங்களில் கழிப்பறையின் அவலங்களை படம் பிடித்ததுடன், பயணிகளிடமும் கருத்து கேட்டனர்.
இந்த ஆய்வு குறித்து சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் செந்தில் ஆறுமுகம் கூறியதாவது :
ஆய்வு...
லஞ்சம், ஊழல், மதுவுக்கு எதிராக போராடி வரும் எங்கள் இயக்கத்தினர் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, ரயில் நிலையங்களில் கழிப்பறைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தோம்.
அசுத்தம்...
தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில், மாம்பலம் ரயில் நிலையத்தை தவிர்த்து, மற்ற ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் மோசமாக உள்ளன. கிண்டி, திரிசூலம் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைக்குள் செல்ல முடியாத அளவிற்கு சுற்றுப்புறம் அசுத்தமாக உள்ளது.
பயணிகள் சிரமம்...
தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை அருகே கழிப்பறை வசதி செய்யப்படாமல், வெளியே உள்ளது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதை நேரடியாக காண முடிந்தது.
மோசமான நிலையில் கழிப்பறைகள்...
வேளச்சேரி - கடற்கரை வழித்தடத்தில், கழிப்பறை வசதி முறையாக இல்லாததோடு, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பயணிகள் கூறினர். கடற்கரை - ஆவடி வழித்தடத்திலும் கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன.
அறிக்கை...
மொத்தம், 47 ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறையின் நிலை குறித்து, அறிக்கை தயார் செய்யப்பட்டு, ரயில்வே அதிகாரிகளை சந்தித்து கொடுக்கவுள்ளோம்.
பொதுநல வழக்கு...
அதற்கு ஓரிரு மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், அடுத்தக்கட்டமாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
3 ரயில் நிலையங்களில் மட்டும்...
இந்த ஆய்வின் மூலம் சென்னையில் உள்ள 47 ரயில் நிலையங்களில் மூன்றில் மட்டுமே கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.