தமிழகத்தில் தேமுதிகவினால் மட்டுமே மாற்றத்தை தரமுடியும்... விஜயகாந்த் அதிரடி
கிருஷ்ணகிரி: தமிழ் நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதா? என்றால் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஊழல் மற்றும் லஞ்சத்தில் மட்டும் மூழ்கி இருக்கிறார்கள். இந்த 2 கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் ஓசூர் ஆர்.சி. தேவாலயம் அருகில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு 500 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள், கால்நடைகளுக்கான உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்கள்.

வளர்ச்சி இல்லை
கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ஓசூரில் இன்று நடைபெற கூட்டம், மிகப்பெரிய மாநாட்டை போல நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதா? என்றால் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

மின்சார தட்டுப்பாடு
மக்களுக்கு என்று எந்த வித திட்டங்களும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. ஓசூரில் நான் வரும் பாதை முழுவதும் தெருவிளக்குகள் எரியாமல் இருட்டாக உள்ளது. இதே போல தமிழகமும் இருண்டுள்ளது. ஓசூரில் கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த காவல்துறை தவறி விட்டது.

ரயில்பாதை இல்லையே
இந்த மாவட்டத்தின் தலைநகரமாக கிருஷ்ணகிரி விளங்கினாலும் இன்னும் மாவட்ட தலைநகருக்கு ரயில்வே இருப்பு பாதை கிடையாது. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டைக்கு ரயில்வே இருப்பு பாதை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இன்னும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

தேமுதிகதான் மாற்று
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஊழல் மற்றும் லஞ்சத்தில் மட்டும் மூழ்கி இருக்கிறார்கள். இந்த 2 கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. செயல்படும். தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளங்கள், அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்காததால் உலக வங்கியால் இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப அனுப்பப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. அதை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட நிலையம் கொண்டு வர இந்த அரசு எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 82 தமிழக மீனவர்களை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியதாகவும், அதனால் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறுகிறார். அவர் கடிதம் எழுதியதால் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. மத்திய அரசு எடுத்த முயற்சியால் இலங்கை அரசு, தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது என்று கூறிய விஜயகாந்த், வரும் தேர்தலில் மற்ற கட்சிகள் பணம் கொடுத்தால் அதனை பெற்றுக்கொண்டு நல்லவர்களை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

தேமுதிக தயார்
முன்னதாக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் இப்போது வந்தால்கூட 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியும் என தெரிவித்தார். சட்டசபை தேர்தலை சந்திக்க தேமுதிக தயாராகி வருவதாகவும் தெரிவித்தார் பிரேமலதா

ஸ்டாலின் பயணம் ஏன்?
தமிழகத்தில் மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு, வேலையின்மை போன்ற பிரச்னைகள் அதிகமாக இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். துணை முதல்வராக இருந்தபோதும், மேயராக இருந்தபோதும் மக்களை சந்திக்காத திமுக பொருளாளர் ஸ்டாலின், தற்போது மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்வது ஏமாற்று வேலை என்றும் பிரேமலதா விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications