எந்தெந்த மாதத்தில் எத்தனை மதுக்கடைகள் மூடப்படும்? அட்டவணை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருந்தால் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்; எந்தெந்த மாதங்களில் எத்தனை மதுக்கடைகள் மூடப்படும் என்ற அட்டவணையை வெளியிட வேண்டும் என்று மக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்குடன் முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களை ஏமாற்றும் செயல்
விற்பனை மிகவும் குறைவாக இருந்த கடைகள் மட்டுமே மூடப்பட்டிருப்பதால், தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இந்த நடவடிக்கை எந்த வகையிலும் உதவாது; மாறாக, மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே உதவும்.

எந்த பயனும் இல்லை
படிப்படியாக மதுவிலக்கு என அறிவித்த தமிழக அரசு, அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் சிறிதளவாவது பயன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், மதுக்கடைகளின் மதுவிற்பனை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டதாக இருந்தாலும், 500 மதுக்கடைகள் மூடப்பட்டதாக இருந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை என்பது தான் உண்மை.

மக்களின் கோரிக்கை நிராகரிப்பு
வழக்கமாக படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் போது சர்ச்சைக்குரிய கடைகள் தான் முதலில் மூடப்படும். அதன்படி, அதிகளவில் மது விற்பனையாகும் கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலுள்ள கடைகள் தான் முதலில் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதோ மது விற்பனை குறைவாக உள்ள கடைகள் மட்டும் தான் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

'ஸ்வாட்' பகுப்பாய்வு
டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை கடந்த ஆண்டு பெருமளவில் குறைந்தது. இதற்கான காரணங்கள், மதுவிற்பனையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் SWOT (Strengths, Weaknesses Opportunities, Threats)பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மிகவும் பலவீனமானவை என்று அடையாளம் காணப்பட்ட மதுக்கடைகள் மட்டும் தான் மூடப்பட்டிருக்கின்றன.

உதாரணம்
உதாரணமாக சென்னை மாநகரில் சுமார் 600 மதுக்கடைகள் உள்ள நிலையில், அவற்றில் ஒரு விழுக்காடு அதாவது 7 கடைகள் மட்டுமே மூடப் பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவில் மது விற்பனையாகும் மாவட்டங்களில் ஒன்றாக கருதப் படும் தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு மதுக்கடை மட்டுமே மூடப்பட்டிருக்கிறது. 264 மதுக்கடைகளைக் கொண்ட சேலம் மாவட்டத்தில் ஒரு கடை கூட மூடப்படவில்லை. அதேநேரத்தில் 187 மதுக்கடைகளைக் கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் 43 கடைகள் அதாவது 25% கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 181 கடைகளில் 36 கடைகள், அதாவது 20% மூடப்பட்டிருக்கின்றன.

வணிக தந்திரம்
எங்கெல்லாம் அதிக அளவில் மது விற்பனை நடக்கிறதோ அங்கெல்லாம் மதுக்கடைகள் மூடப்பட வில்லை. அதேபோல், எந்தெந்த கடைகளில் விற்பனை குறைவாக நடந்ததோ, அக்கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. அழுகிய காய்கறிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை தானம் கொடுத்து விட்டதாக கடையின் உரிமையாளர் கணக்கு காட்டினால் அது எவ்வளவு கேவலமானதாக இருக்குமோ, அதைப் போன்றது தான் இதுவும். லாபம் தரும் கடைகளை மட்டும் வைத்துக் கொண்டு, இழப்பை ஏற்படுத்தும் கடைகளை மூடினால் அதற்குப் பெயர் வணிக தந்திரமே தவிர, படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் செயல் அல்ல என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது.

நீதிமன்ற உத்தரவு
கடந்த காலங்களில் பள்ளிக்கூடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் அருகில் உள்ள ஏராளமான மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு கட்டங்களில் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இவற்றை அகற்றுவது தான் உண்மையாகவே படிப்படியான மதுவிலக்குக்கு வகை செய்யும்.

அரசுக்கு அக்கரை இல்லை
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை இல்லை என்பதால் பெயரளவில் 500 கடைகளை மூடியிருக்கிறது. இதனால் மதுவிற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எந்த வகையிலும் குறையாது; திமுக மற்றும் அதிமுகவினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்து டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்யும் மதுவின் அளவும் குறையாது.

கால அட்டவணை வேணடும்
தமிழ்நாட்டை சீரழிக்கும் மது அரக்கனை ஒழிப்பதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருந்தால் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான மதுக்கடைகளை உடனடியாக மூட ஆணையிட வேண்டும். மீதமுள்ள மதுக்கடைகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடுவதாக அறிவித்து, எந்தெந்த மாதத்தில் எத்தனை மதுக்கடைகள் மூடப்படும் என்பதற்கான கால அட்டவணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications