ஜெயலலிதாவை விடுவிக்க கோரி நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு- சுற்றுலாப் பயணிகள் அவதி
நீலகிரி: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
18 வருடங்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீது நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்தவாரம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகள் பலகட்டங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகள்...
தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று அங்கு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கடைகள் மற்றும் ஓட்டல்கள் அடைக்கப் பட்டுள்ளன. இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடைகள் அடைப்பு...
குன்னூர் பகுதியில் மேல் குன்னூர், ஓட்டுப்பாறை, வெலிங்டன், அருவங்காடு, எலநல்லி, வண்டிச்சோலை, சேனாக், கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளின் இன்று கடைகள் அடைக்கப்பட்டது.

தேயிலை தொழிற்சாலைகள்...
கோத்தகிரி, மேல் கோத்தகிரி, கொடநாடு, சேலூர் மட்டம், அரவேணி, கொட்டக்கம்பை, வெஸ்ட் புரூக், கட்டுப்பாடு, குஞ்சப்பனை ஆகிய இடங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் இயங்கவில்லை.

இயல்பு நிலை பாதிப்பு...
மினி பஸ், ஆட்டோ, டாக்சிகள் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வெளியில் எங்கும் செல்லாமல் அறைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.












Click it and Unblock the Notifications