ஊட்டி- இறந்ததாக நினைத்த மாணவன் உயிர் பிழைத்து மீண்டும் மருத்துவமனையில் இறப்பு!
கோவை: நீலகிரியில் இறந்ததாக நினைத்து உயிர் பிழைத்த மாணவர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மீண்டும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பழைய ஊட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஒரு விவசாயி. இவரது மகன் மூர்த்தி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி வீட்டில் பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு அவர்கள் தர மறுத்து விட்டனர்.
இதனால் மனமுடைந்த மூர்த்தி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காததால் வீட்டுக்கு மூர்த்தியை அவரது பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு மூர்த்தியின் மூச்சு நின்றதால் அவர் இறந்துவிட்டதாக அவரது பெற்றோர்கள் கருதினர். தகவலறிந்ததும் உறவினர்களும் அங்கு திரண்டனர். இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இறுதிசடங்குக்கு முன்பு அவரது தாய் மூர்த்திக்கு அவரது ஆசையான காபியை தனது கையால் மூர்த்தியின் வாயில் ஊற்றினார். அப்போது மூர்த்திக்கு நாடித்துடிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் அங்கிருந்த உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மூர்த்தியை சிகிச்சைக்காக கடந்த 21 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications