உதகையில் கோடை விழா: பயணிகளை வரவேற்ற ரோஜா கண்காட்சி, நாய்கண்காட்சி!
உதகமண்டலம்: உதகையில் கோடை விழாவையொட்டி 13வது ரோஜாக் கண்காட்சி அங்குள்ள அரசினர் ரோஜா பூங்காவில் துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் முனைவர் சங்கர் துவக்கி வைத்தார்.
உதகையில் கோடை சீசனையொட்டி நடத்தப்பட்டுவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, உதகை அரசினர் ரோஜா பூங்காவில் இரண்டு நாள் ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

27000 ரோஜா செடிகள்
உதகையிலுள்ள அரசினர் ரோஜா பூங்காவில் நடப்பாண்டில் 4,000 ரோஜா ரகங்களில் 27,000 ரோஜா செடிகள் அமைந்துள்ளன. இவை அனைத்திலும் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

சுற்றுலா பயணிகள் வருகை
உதகையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழை முடிவுக்கு வந்துள்ள சூழலில், இன்று தொடங்கிய ரோஜா கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மரகத வீணை
இவ்வாண்டுக்கான கண்காட்சியையொட்டி, பூங்காவின் நுழைவாயிலில் ரோஜா மலர்களாலான அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளதுடன், நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறைசார்பில் 15,000 ரோஜா மலர்களைக் கொண்டு பிரமாண்டமாக மலர் வீணையும் உருவாக்கப்பட்டுள்ளது.

மலர்களால் அலங்காரம்
அதேபோல, கிருஷ்ணகிரி, கோவை, சேலம், மதுரை, கொடைக்கானல், தருமபுரி மாவட்டங்களின் தோட்டக்கலைத் துறை சார்பில் ரோஜா மலர்களாலான பல்வேறு உருவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ரோஜா வளைவு
இந்த கண்காட்சியின் முகப்பில் ரோஜா மலர்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

பலவித அலங்காரங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் 6000 ரோஜா மலர்களைக் கொண்டு பாராசூட் , கோவை மாவட்டத்தின் சார்பில் 5 ஆயிரம் ரோஜா மலர்களால் கங்காரு, சேலம் மாவட்டத்தின் சார்பில் 4 ஆயிரம் ரோஜா மலர்களால் ரோஜா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோஜா ரங்கோலி
மதுரை சார்பில் 3500 ரோஜா மலர்களைக் கொண்டு சிலம்பாட்டம், கொடைக்கானல் சார்பில் 4000 ரோஜா மலர்களால் பென்குயின், தருமபுரி மாவட்டத்தின் சார்பில் 4000 மலர்களால் ரோஜா சிறப்பு அலங்காரமும், ரோஜாமலரின் இதழ்களைக் கொண்ட ரங்கோலி அமைக்கப்பட்டுள்ளது.

நாய்கண்காட்சி
கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் தென்னிந்திய கெனல் கிளப் சார்பில் நடத்தப்படும் நாய் கண்காட்சி உதகையில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள்
இக்கண்காட்சியில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கேரவன் ஹவுண்டு உள்ளிட்ட 4 பிரிவுகளில் 38 உள்ளூர் நாய்களும், 432 பிற வகை நாய்களும் பங்கேற்கின்றன. இக்கண்காட்சிக்காக தில்லி, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கீழ்படிதல் போட்டிகள்
தொடக்க நாளான வெள்ளிக்கிழமை, நாய்களுக்கு கீழ்ப்படிதல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த நாய்கள் அதிக அளவில் பங்கேற்றன.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கனமழை பெய்து வந்த உதகையில் தற்போது மழை நின்று இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கோடை விழா கண்காட்சிகளை ரசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications