"ஆபரேஷன் ஆம்லா" பாதுகாப்பு ஒத்திகை... சிக்கிய போலி தீவிரவாதிகள்... போலி வெடிகுண்டுகளும் பறிமுதல்
கடலூர் : "ஆபரேஷன் ஆம்லா" என்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 3 போலி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலோர பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 200 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நவீன யுக்தியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல் யுக்திகளை சமாளிக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் ஆம்லா என்ற பெயரில் கடலோர மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகள் போல் வேடமிட்டு கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ ஊடுருவி வரும் கமாண்டோ படை வீரர்களை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும். இதுவே ஆபரேஷன் ஆம்லா என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியாகும். இவ்வாறு தீவிரவாதிகள் வேடமணிந்து வரும் அனைத்து வீரர்களை பிடித்தால் பாதுகாப்பு ஒத்திகை வெற்றி அடைந்ததாக கருதப்படும்.
அந்த வகையில் இன்று (வெள்ளி) காலை 6 மணிக்கு இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டை கடற்கரையோர பகுதி வரை அதிநவீன படகில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, சித்திரைப்பேட்டையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் கடல் பகுதியில் விசைப்படகில் 6 பேர் இருந்தனர்.
அவர்கள் போலீசாரை கண்டதும் மீன்பிடிப்பது போல் நடித்தனர். இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல் படையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இந்திய கடற்படை வீரர் ராஜூ, இந்திய கடலோர காவல்படை வீரர்கள் பண்டிகுமார், சிவா, கமாண்டோ படை வீரர்கள் மனோ, சிவா, ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் என்று தெரிய வந்தது.
அவர்கள் 6 பேரும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி மீன்பிடிப்பது போல் வந்து, கடலூர் துறைமுகம் அருகே உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு குண்டு வைப்பதற்காக போலியான திட்டம் வகுத்தது தெரிந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 3 போலி வெடி குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிடிபட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலோர கிராமங்களில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி இந்த பாதுகாப்பு ஒத்திகைக்காக வந்த டோர்னியர் விமானம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் கடல் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 விமானிகள் பலியானார்கள். இதையடுத்து அப்போது நடக்க இருந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 மாதங்களுக்கு பிறகு இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கி உள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.
ஆபரேஷன் ஆம்லா என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தைய நாள் கடலோர காவல்படைக்கு சொந்தமான குட்டி ரக விமானத்தில் கடற்கரையோர பகுதிகளை விமானிகள் வந்து கண்காணிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு வந்த டோர்னியர் விமானம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த விமானிகள் 3 பேரும் பலியாகினர்.
இந்த சம்பவத்தால் நேற்று நடந்த பாதுகாப்பு ஒத்திகையையொட்டி நேற்று முன்தினம் விமானம் மூலம் பாதுகாப்பு ஒத்திகையை இந்திய கடலோர காவல்படையினர் நடத்தவில்லை என்று கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications