ஆபரேசன் சசிகலா புஷ்பா... அடுத்தடுத்து பாயும் வழக்குகள்... பின்னணியில் யார்?
சென்னை: அம்மாவை அடி பணிந்தால் உச்சியில் வைப்பார்...எதிர்த்தால்....? எதிர்த்தவர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள் என்பதுதான் அதிமுக வட்டாரங்களில் பேச்சாக இருக்கிறது. இப்போது 'ஆபரேசன் சசிகலா புஷ்பா'வை ஆரம்பித்து அடுத்தடுத்து வழக்குகள் போடப்படுவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா முதல்வர் ஜெயலலிதா தன்னை பதவி விலக வற்புறுத்துவதாகவும், அடித்ததாகவும் மாநிலங்களவையில் கூறினார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய சசிகலா புஷ்பா பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். பின்னர் டெல்லி போலீசில் ஜெயலலிதா மீது புகார் அளித்தார். இப்படி அடித்தடுத்து அதிரடிகளில் இறங்கிய சசிகலா புஷ்பா விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் பரவி வருகிறது.
சசிகலா புஷ்பாவின் வளர்ச்சி எந்த வேகத்தில் இருந்ததோ... அதை விட வேகமாக இருக்கிறது அவரது வீழ்ச்சி... இதன் பின்னணியில் மகளிர் அணியினர் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் போயஸ்தோட்டத்தின் முக்கிய நபர் இருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. அவரது பெயரும் புகார் பட்டியலில் இருப்பதோடு நம்மால் முன்னுக்கு வந்தவர் இப்படி வரம் கொடுத்தவர் தலையிலேயே கை வைக்க நினைப்பதா? என்ற கோபம்தான் இப்படி கொப்பளித்து வழக்காக பாயத் தொடங்கியிருக்கிறதாம்.
எங்க வந்து யாரு கிட்ட?
அம்மா முன்னாடி ஆம்பளைங்களே குனிஞ்ச தலை நிமிராம நிற்பாங்க. இந்த பொம்பளைக்கு எவ்வளவு தைரியம் இருந்தா... இப்படி வெளியில போய் திமிராக பேசியிருப்பா என்று கோபத்துடன் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த முக்கிய நபர், ஏதாவது வழக்கில் சசிகலா புஷ்பாவை சிக்க வைத்தே ஆக வேண்டும் என்று அசைன்மெண்ட் கொடுத்துள்ளாராம்.
ஆதி முதல் அந்தம் வரை
சசிகலா புஷ்பாவின் ஆதியில் இருந்து அந்தம் வரை போலீஸ் தோண்ட ஆரம்பித்திருக்கிறதாம். சசிகலா புஷ்பா நடத்தும் லேடீஸ் ஹாஸ்டலுக்கு முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறாரா? சென்னைக்கு வந்த புதிதில் சசிகலா புஷ்பா மசாஜ் சென்டர் நடத்தியிருக்கிறார். அப்போது அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்று விசாரணை நடந்தபடியே இருக்கிறது.
போலீஸ் கண்காணிப்பு
சசிகலா புஷ்பா தான் பயன்படுத்தி வந்த செல்போன் நம்பரில் இருந்து இப்போது யாரையும் அழைப்பது இல்லையாம். அந்த நம்பர் முழுக்க போலீஸ் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. அந்த நம்பருக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் போலீஸ் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டதாம்.
டார்கெட் சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா, தற்போது வேறு செல்போன் எண்ணைப் பயன்படுத்துகிறார். புது எண் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவிர,வேறு யாருக்கும் தெரியாதாம். அவருடைய நம்பருக்கு எந்த அழைப்பு வந்ததாலும், சசிகலா புஷ்பாவின் கணவர்தான் பேசுகிறாராம்.
பானுமதியின் பகீர் புகார்
போலீசார் தீவிரமாக தேடியதில் சிக்கியவர் சில வருடங்களுக்கு முன்பு சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்த பானுமதி. அவரை வைத்துதான் தற்போது தூத்துக்குடியில் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.
பர்சனல் பக்கங்கள்
பானுமதி கொடுத்த புகாரில் சசிகலா புஷ்பாவின் பர்சனல் பக்கம் வரை விட்டு வைக்கவில்லை. 2012ஆம் ஆண்டில் இருந்து 2015 வரை கொடுமைகள் நடந்ததாக பானுமதி சொல்லியிருக்கிறார். பானுமதி கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கியிருக்கிறது தூத்துக்குடி காவல்துறை.
எந்த நேரத்திலும் கைது?
இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்தால் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோரை எளிதில் கைது செய்யலாம். அதற்கான ஏற்பாடுகள்தான் நடந்து வருகிறது. வழக்கு பதிவு செய்தால், தூத்துக்குடி போலீஸ் டெல்லி சென்று எந்த நேரத்திலும் வழக்குப் பதிவு செய்து சசிகலா புஷ்பாவை கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது.
ஆபரேசன் சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா தொடர்பான அப்டேட்கள் அத்தனையும் கார்டனில் இருக்கும் அந்த முக்கிய நபரிடம்தான் அதிகாரிகள் சொல்கிறார்களாம். கடந்த வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம் தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்குப் போன அந்த முக்கிய நபரை, நெல்லையைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி வந்து சந்தித்தாராம். அப்போதுதான் 'ஆபரேசன் சசிகலா புஷ்பா'விற்கு அடித்தளம் போடப்பட்டதாம்.
தயாராகும் புகார்கள்
பானுமதி கொடுத்துள்ள புகார்கள் போல சசிகலா புஷ்பாவை அசிங்கப்படுத்துவதைப் போல இன்னும் சில புகார்களும் தயாராகி வருகிறதாம். அந்த புகார்கள் வெளி வரும்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அரங்கத்துக்கு கொண்டு வருவார்களாம். சசிகலா புஷ்பாவைச் சுற்றி இருப்பவர்களையும், இருந்தவர்களையும் வைத்தே புகார் கொடுக்க திட்டங்கள் தயாராகி வருவதாக சொல்கிறார்கள். இன்னும் எத்தனை வழக்குகள் பாயுமோ?.... சமாளிப்பாரா சசிகலா புஷ்பா.