கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை..தமிழிசை
சென்னை: பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கணிப்புகள் மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''மகாராஷ்டிரம், ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா, டெல்லி, பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெளியான கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போனது. அதுபோல தமிழகத்தில் யாருக்கு வெற்றி என்பது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கணிப்புகள் மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.
ஆனால், ஒரு மருத்துவர் என்ற முறையில் இந்தக் கணிப்புகள் வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் நான் அறிவேன்.
வெற்றி பெறும் வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் இருப்பதால், இத்தகைய கணிப்புகள் கட்சித் தொண்டர்களை சோர்வடையச் செய்யும். இரு ஊழல் கட்சிகளுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.