உள்ளாட்சி இடைத்தேர்தல்: நம்பியார் இல்லாத எம்.ஜி.ஆர் படம் நல்லா இருக்குமா?
சென்னை: இன்று அரசியல் களத்தில், எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர், எங்கோ மறைந்தார். நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் பணியாற்றினால், இனி நம்மை வீழ்த்த, எந்த சக்தியும் இல்லை,''இது 7வது முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தொண்டர்கள் மத்தியில் பெருமிதத்தோடு ஜெயலலிதா ஆற்றிய உரை.
ஜெயலலிதா சொன்ன கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைக்கு உண்மையாக்கும் வகையில் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் களம்.
தமிழகத்தில், மூன்று மாநகராட்சி மேயர் பதவி; எட்டு நகராட்சி தலைவர்; 12 மாநகராட்சி கவுன்சிலர்; 53 நகராட்சி கவுன்சிலர்; ஏழு பேரூராட்சி தலைவர்; 101 பேரூராட்சி கவுன்சிலர்; 11 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்; 82 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. மேலும், பல்வேறு ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளும் காலியாக உள்ளன.இப்பதவிகளுக்கு, வரும் 18ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது.

ஆளுங்கட்சியின் அறிவிப்பு
ஆளுங்கட்சியான அதிமுக மட்டும் இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. வேட்புமனுவை தாக்கல் செய்த கையோடு வாக்கு சேகரிக்கும் பணியிலும் அவர்கள் இறங்கிவிட்டனர்.

ஒதுங்கிய திமுக
உள்ளாட்சி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிட, எதிர்க்கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., 'போதிய கால அவகாசம் இல்லை' எனக் கூறி, ஒதுங்கிவிட்டது.

அப்செட் ஆன ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தாலும் அந்த அறிவிப்பில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்றே கூறுகின்றனர் அறிவாலய வட்டாரங்களில். ஏனெனில் இடைத்தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட கோவையிலும், தூத்துக்குடியிலும் திமுக தரப்பில் வேட்பாளர்கள் தயாராகவே இருந்தார்களாம்.

பின்வாங்கிய மு.க
ஆனால் கட்சியில் நடைபெறும் பூசல்கள் காரணமாகவே தலைவர் கருணாநிதி பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கருணாநிதி அறிவித்த நேரத்தில் ஸ்டாலின் கோவையில் இருந்தாராம்.

வழிவிட்ட எதிர்கட்சிகள்
திமுக மட்டுமல்லாது முக்கிய எதிர்க்கட்சிகளான தேமுதிக, மதிமுக, பாமக, காங்கிரஸ் என அனைவருமே ஒதுங்கிக் கொண்டனர். தமிழகத்தில் பா.ஜ.க மட்டும் களம் இறங்க ஆயத்தமாகியதோடு அதற்கான முயற்சியிலும் வெற்றி பெற்றுள்ளது.

களமிறங்கிய தமிழிசை
லோக்சபா தேர்தலில் ஏற்படுத்திய கூட்டணிக்கு, மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இறங்கினார். உள்ளாட்சி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்த்து, களம் இறங்கும் திட்டத்துடன், அவர், பழைய கூட்டணி கட்சித் தலைவர்களை வரிசையாக சந்தித்து ஆதரவு கேட்டார்.

ஆதரவு தெரிவித்த கட்சிகள்
அவரது முயற்சி வீண் போகவில்லை. மதிமுகவும், தேமுதிகவும் தங்களின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்த கையோடு பாஜகவிற்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்து விட்டன.

மாறிய விஜயகாந்த்
பிரதான கட்சிகளில் ஏதேனும் ஒன்று தேர்தலை புறக்கணிக்கிற தருணங்களில் எல்லாம் அந்த தேர்தலை தேமுதிக உற்சாகமாக எதிர்கொள்ளும். காரணம் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை அப்படியே அள்ளிவிடலாம் என்ற கணக்குதான். ஆனால் இந்த முறை விஜயகாந்த் அந்த பார்முலா கையில் எடுக்காமல் போனதற்குக் காரணம் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கத்தானாம்.

கூட்டணி மர்மம்
திமுக உடன் தேமுதிக நெருங்குவது போல செய்திகள் வெளியாவதை விஜயகாந்த் விரும்பவில்லை என்றே தெரிகிறது. எனவேதான் தனது பிறந்தநாளின் போது பாஜகவினர் வாழ்த்துக்களை ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடச் செய்தார் விஜயகாந்த். லோக்சபா தேர்தல் கூட்டணியை அதற்குள் உடைக்க விரும்பவில்லை விஜயகாந்த் என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

கமலாலயம் போதும்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது எனினும் அறிவாலயம் பக்கம் விஜயகாந்தை இழுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறும் நிலையில் அவர் கமலாலயமே போதும் என்று முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் எப்படி இருக்கும்?
இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல், ஆகஸ்ட் 28ம் தேதி துவங்கியது. வியாழக்கிழமை ( செப்.4) உடன் மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி இடைத்தேர்தல் என்றாலே ரகளையாகத்தான் இருக்கும். மாமன், மச்சான்களே எதிர் எதிர் அணியில் போட்டியிடுவார்கள். யாருக்கு ஓட்டு போடுவது என சொந்த பந்தங்களே குழம்பித்தான் போவார்கள். இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பாஜகதான் பிரதானமாக களமிறங்குகிறது. ஓருவேளை இந்த தேர்தல் நம்பியார் இல்லாத எம்.ஜி.ஆர் படம் போல இருக்குமோ?












Click it and Unblock the Notifications