குழம்பி நிற்கும் எதிர்க்கட்சிகள்... அமைதியாக இருக்கும் பாஜக.. அடுத்து என்னவெல்லாம் நடக்கும்?
சென்னை: நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தால் தமிழகத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் இன்று கொண்டாடித் தீர்த்திருக்கும். ஆனால் அதை அப்படியே தடம் புரள வைத்து விட்டது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் மாறுபட்ட தீர்ப்பு. தீர்ப்பு குறித்த விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, அடுத்து தமிழக அரசியல் களத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற யூகங்களும், வாதங்களும், ஆய்வுகளும் அலையடிக்க ஆரம்பித்து விட்டன.
இதுவே தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருந்தால் இதுதான் கூட்டணி, இப்படித்தான் கூட்டணி இருக்கும் என்று ஓரளவுக்குத் தெளிவாக கூறியிருக்க முடியும். ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரியாக மாறி விட்டது. பொசுங்கிப் போய்க் கிடந்த அதிமுக மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விட்டது. மற்ற அத்தனைக் கட்சிகளும் மறுபடியும் டல்லடிக்க ஆரம்பித்து விட்டன. விஜயகாந்த்தின் பேச்சையே காணோம்.

பலவீனம்
ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு வரை எதிர்க்கட்சிகள் மிக மிக பலவீனமாகவே இருந்து வந்தன. வழக்கமான விவாதங்கள், வாய்ச் சண்டைகள், சவால்கள், பதில் சவால்கள் என்ற அளவில்தான் இருந்து வந்தன.

திடீரென வந்த ஊக்கம்
ஆனால் ஜெயலலிதா சிறைக்குப் போன பின்னர் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்தது. அமைதியாக கிடந்த கட்சிகள் எல்லாம் ஆர்ப்பாட்டமாக வெளியுலகை வலம் வர ஆரம்பித்தன.

திட்டம் போட்ட கட்சிகள்
இதை சரியாக பயன்படுத்தி புதிய கூட்டணிக்காக திமுகவும் கடுமையாக முயன்று வந்தது. தன் பக்கம் தேமுதிக, காங்கிரஸ், இடதுசாரிகளை எப்படியாவது இழுத்து வர முயன்று வந்தது.

ஆதாயம் காணும் காய் நகர்த்தல்கள்
மறுபக்கம் பாஜக, ஜெயலலிதா இல்லாத நிலையைப் பயன்படுத்தி ஆதாயம் காணும் வகையில் காய்களை நகர்த்தி வந்தது. காங்கிரஸும் ஜெயலலிதா இல்லாததை வைத்து அரசியலில் வலுவாக காலூன்றும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வந்தது.

அழுது வடிந்த அதிமுக
மறுபக்கம் அதிமுக படு சோகமாக காட்சி தந்தது. எப்போது பார்த்தாலும் அழுகை, சிறப்புப் பூஜைகள் என அதிமுகவினர் "அம்மா"வின் விடுதலையைப் பற்றி மட்டுமே கவலையாக காட்சி தந்தனர். இதனால் அரசு நிர்வாகம் கிட்டத்தட்ட இயங்காத நிலைக்குப் போய் விட்டது.

மாற்றிப் போட்ட குமாரசாமி
ஆனால் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு அவர்களை அப்படியே மாற்றிப் போட்டு விட்டது. பழைய பலம் திரும்பி விட்டது போன்று அதிமுகவினர் உணர்கின்றனர். ஜெயலலிதா முதல்வராகிறார் என்பதே அதிமுகவினருக்கு மிகப் பெரிய சந்தோஷமாக, பலமாக மாறியுள்ளது.

ஸ்தம்பித்த எதிர்க்கட்சிகள்
ஆனால் எதிர்க்கட்சிகளோ முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. ஜெயலலிதா இல்லை என்பதை வைத்து அவர்கள் போட்ட கணக்குகள் எல்லாம் தப்புத் தப்பாக போயுள்ளன. மொத்தமாக அவர் வந்து நிற்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று அவர்களுக்கேத் தெரியவில்லை.

குறி வைத்த திமுக
அதிமுக அரசை கடுமையாக சாடி வந்தது திமுக. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைக் குறி வைத்து தினசரி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். உச்சமாக, முதல்வருக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருந்தார். அதற்குப் பதில் வந்ததோ பாமகவிடமிருந்து!

தனி ஆவர்த்தன பாமக
டாக்டர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனியாக களமாடி வருகிறது. யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். எங்களது தலைமையை ஏற்று சாதி, சமுதாய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று பாமக கூறி வருகிறது.

எப்பவுமே குழப்பமான தேமுதிக
தேமுதிக நிலை குழப்பம்தான். அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு முதல்வர் கனவு இன்னும் உள்ளது. பாஜகவுடன் அவர் இருக்கிறாரா இல்லையா என்பது அவருக்கேத் தெரியவில்லை. திமுகவுடனும் திடீரென நெருங்கினார். பாமகவை பகிரங்கமாக விமர்சிக்காமலும் இருக்கிறார். காங்கிரஸுடன் போவாரா என்பதும் தெரியவில்லை. கம்யூனிஸ்டுகளையும் அவர் விமர்சிப்பதில்லை. மொத்தத்தில் எளிதில் விளக்க முடியாத தலைவராக விஜயகாந்த் இருக்கிறார்.

சலசலப்பு ஈவிகேஎஸ்
அரசியல் அரங்கில் திடீரென சலசலப்பை ஏற்படுத்தியது காங்கிரஸ். நடிகை குஷ்பு உள்ளிட்டோர் சகிதம், ஆளுநரைச் சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் அரசுக்கு எதிராக ஊழல் புகார் பட்டியலை ஈவிகேஎஸ் இளங்கோவன் வழங்கினார். இதேபோன்ற பட்டியலை ஏற்கனவே பாமகவும் கொடுத்துள்ளது.

ரவுண்டு அடிக்கும் வாசன்
கிடைத்த கேப்பில் ஜி.கே.வாசனும் தமிழகத்தை ஒரு ரவுண்டு அடித்து வந்தார். பல தலைவர்களுடன் அவருக்கு நல்ல நெருக்கமும் ஏற்பட்டது. அவரும் தனது கட்சியை நிதானமாக வளர்க்கத் தேவையான அடிப்படை வசதிகளை இந்த காலகட்டத்தில் செய்ய முடிந்தது.

குட்டிக் கட்சிகள் ஒருபக்கம்
மற்ற கட்சிகளும் ஜெயலலிதா இல்லாத இந்த காலகட்டத்தில் சற்று நிதானித்து நடை போட வாய்ப்பு கிடைத்தது. கூட்டணி தொடர்பாக சுதந்திரமாக செயல்படவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

வந்தார் ஜெயலலிதா!
இப்போது ஜெயலலிதா திரும்பி வந்து விட்டார். இந்த நிலையில் யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பது தெளிவாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மீண்டும் வலுவாக திரும்பியுள்ளதால் எதிர்க்கட்சிகள் அத்தனை ஒன்று திரண்டால் மட்டுமே வருகிற சட்டசபைத் தேர்தலில் சற்று சமாளிக்கவாவது முடியும்.

அச்சத்தில் கட்சிகள்
காரணம், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இப்போது வரையிலான அதிமுக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தாலும் கூட ஜெயலலிதா அதைச் சரி செய்து விடுவார் என்ற நம்பிக்கை அதிமுகவினரை விட எதிர்க்கட்சியினருக்கு அதிகம் உள்ளது. காரணம், ஒரு சில பிரச்சினைகளைத் தவிர ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் மீது மக்களுக்கு மிகப் பெரிய அதிருப்தி இல்லை என்பதே நிதர்சனம்.

யார் யாருடன்
எனவே ஜெயலலிதாவை சமாளிக்க திமுக, தேமுதிக முதலில் கூட்டணி சேர வேண்டும். இந்தக் கூட்டணி வலுவடைய தலித் கட்சிகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் பிறர் கூட வர வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் பாமக ஆகியவை வந்து சேர வேண்டும்.

வருமா பாமக
ஆனால் பாமக வருவது சந்தேகம்தான். காரணம், அனைவருக்கும் தெரிந்ததுதான். ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலினை, அதிமுகவினரை விட மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி விட்டார் டாக்டர் அன்புமணி. இது ஒரு முக்கியத் தடை. அதேபோல விஜயகாந்த்தையும் மிகக் கடுமையாக சாடி வருகிறார் அன்புமணி.

சந்தேக கேஸ் பாஜக
மறுபக்கம் பாஜக சந்தேகத்திற்குரிய வகையில் இருந்து வருகிறது. அது அதிமுகவுடன் கூட்டணி சேரும் என்று திடீரென பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இத்தனை சீட் என்று பேசி விட்டதாகவும் கூட சொல்லப்படுகிறது. ஆனால் அதெல்லாம் சாத்தியமா என்பது தெரியவில்லை. காரணம், ஜெயலலிதாவை அறிந்தவர்களுக்கு, அவர் அத்தனை சீட்களை சாமானியமாக விட்டுக் கொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

சிங்கிள் அதிமுக
இப்போது உள்ள சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் அதிமுக மீண்டும் தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது. அத்துடன் சின்னச் சின்ன கூட்டணிக் கட்சிகளை வழக்கம் போல சேர்த்து ஆளுக்கு ஒன்று அல்லது 2 சீட் தரலாம். ஒரு வேளை பாஜக வந்தாலும் கூட மிகப் பெரிய அளவில் அவர் சீட் தருவார் என்று எதிர்பார்க்க முடியாது.

இவர்கள் இணையலாம்
திமுக, தேமுதிக, காங்கிரஸ் கூட்டணி சேரலாம். இந்தக் கூட்டணியில் புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் இணையலாம். கம்யூனிஸ்டுகள் வருவார்களா என்பது சந்தேகம்.

இவர் போகலாம்
ஜி.கே.வாசன் அதிமுக கூட்டணிக்குப் போக வாய்ப்புண்டு. அப்படி இல்லாவிட்டால் மதிமுக, கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஒரு கூட்டணிக்கு முயலலாம்.

ஒண்டிக்கு ஒண்டி
பாமக தனித்துப் போட்டியிட வாய்ப்புண்டு. கூடவே சமுதாய கட்சிகளை அது இணைத்துப் புதுக் கூட்டணியாக களம் காணலாம். அல்லது கடைசி நேரத்தில் அதிமுகவுக்கு ஆதரவான நிலைக்கு மாறும் வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.

என்ன வேணும்னாலும் நடக்கலாம்
இதெல்லாம் யூகம்தான்.. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. வரப் போகும் நாட்களில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications