பொதுக்குழுவை வெற்றிகரமாக கூட்டுவோம்.. ஓ.பன்னீர் செல்வம் உறுதி
பொதுக்குழுவை கூட்டியே தீருவோம் என்று துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: அதிமுக பொதுக்குழுவை வெற்றிகரமாக கூட்டுவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தில், சுதந்திரப் போராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபம் உள்ளது. இன்று அவரது பிறந்த தினம்.
இதை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், முதன்முறையாக மாவீரன் பூலித்தேவன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடுவதாக கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வரும் செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என அறிவித்திருப்பது சட்ட விரோதமானது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சட்டவிரோதமாக நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறினார்.