கண்கள் பனிக்க.. இதயம் இனிக்க .. இணையும் "அதிமுக:.. குஷியில் தொண்டர்கள்!
அதிமுகவின் இரு அணிகளும் இணையப்போவதை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைய உள்ளதை தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பிப்ரவரி 7ஆம் தேதியன்று பிளவுபட்ட அதிமுக அணி 6 மாதகாலத்திற்குப் பிறகு இணைகிறது. ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன.
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
சசிகலாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல டிடிவி தினகரன் பெங்களூரு சென்றுள்ள நிலையில் இரு அணி தலைவர்களும் ஒன்றாக இணைய முடிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வர உள்ள நிலையில் அவர்களை வரவேற்க இரு அணி தொண்டர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகளைச் சேர்ந்த தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
கண்கள் பனிக்க இதயம் இனிக்க அணிகள் இணையப்போகின்றன. அதை உற்சாகத்துடன் கொண்டாட தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
காலை முதலே தொண்டர்கள் பல ஊர்களில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.
அணிகள் இணையப்போகுது இணையப்போகுன்னு சொல்றாங்களே... என்ன பசை போட்டு ஒட்டப்போறாங்க என்று கேட்கிறார்கள் தொண்டர்கள்.