அத்தனையும் நடிப்பா, 'கோப்பால்..', நடிப்பா?
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இதுதான் உண்மை என்று ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வந்தன. எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், இப்போது பன்னீர்செல்வம் அதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேநேரம் இதுவரை அவர் கூறிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
நேரம் ஒதுக்கிய பிரதமர்
தர்மயுத்தம் என்ற பெயரில் பன்னீர்செல்வம் அதிமுகவில் கலகம் செய்தபோது, டெல்லிக்கு எப்போது சென்றாலும் பிரதமர் மோடி வீட்டு கதவுகள் திறந்தே இருந்தன. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை கூட சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை பிரதமர். ஆனால், எந்த பதவியிலும் இல்லாமல் இருந்த ஒருவரை தொடர்ந்து சந்தித்தார்.
நீட் தேர்வு
சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம், தமிழக நலன் சார்ந்து பேச வந்தேன், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு பிரதமரிடம் வலியுறுத்த வந்தேன் என்றெல்லாம் கூறியவர்தான் பன்னீர்செல்வம். ஆனால் இப்போது, அவரே இணைப்பு குறித்து மோடி கூறியதாக தெரிவித்துள்ளார். எனவே தமிழக நலன் குறித்த பேச்சுவார்த்தை அங்கு நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என்பது 'அதிகாரப்பூர்வமாக' தெரியவந்துவிட்டது.
பிரதமர் பணி
பிரதமர் மோடியும், பன்னீர்செல்வம்-எடப்பாடி அணியை இணைப்பதில் படு பிஸியாக இருந்துள்ளார் என்பதும் வெளிப்படையாகிவிட்டது. பிரதமர் எதற்காக மற்றொரு கட்சி விவகாரத்தில் பஞ்சாயத்து செய்தார் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
அரசியல் சர்ச்சை
பன்னீர்செல்வம் தெரிவித்த இந்த கருத்துக்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அவரது நோக்கமே வேறு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு அவல் கொடுத்துவிட்டார் பன்னீர்செல்வம். உண்மையை போட்டு உடைத்து பிரதமருக்கு எதிராக ஒரு தர்மயுத்தம் செய்கிறாரோ என தோன்ற வைக்கிறது அவரது கருத்து.