மதுரையில் தினகரனை சந்திக்கவில்லை: சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் விளக்கம்
மதுரையில் தினகரனை சந்திக்கவில்லை என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தினகரனை தாம் சந்திக்கவில்லை என்று ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ மாணிக்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக 3 அணிகளாக பிளவுபட்டு மல்லுக்கட்டி வருகின்றன. டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்து கொள்ள முடியாது என்றும், அவரை துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தது செல்லாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனிடையே எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலூரில் பொதுக் கூட்டத்துக்கு தினகரன் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பை கடுமையாக விமர்சித்தார் தினகரன்.

மீனாட்சி அம்மன் கோவில்
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது ஓபிஎஸ் அணியில் உள்ள சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கமும் அக்கோயிலுக்கு சென்றார்.

மாணிக்கம் எம்.எல்.ஏ.
இதையடுத்து தினகரனை மாணிக்கம் சந்தித்ததாக தகவல் பரவ அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தினகரனை தாம் சந்திக்கவில்லை என மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

செல்வாக்கால் கூடவில்லை
இதுகுறித்து எம்.எல்.ஏ மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலூரில் தினகரனுக்கு கூடும் கூட்டத்தை வைத்து எதையும் எடை போட முடியாது. அது செல்வாக்கால் கூடிய கூட்டம் அல்ல. செல்வத்தால் கூடிய கூட்டம்.

ஆட்சிக்கு ஆபத்து இல்லை
நான் ஓபிஎஸ் அணியில்தான் உள்ளேன். எங்களால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்த பிரச்சினையும் வராது.

தினகரனை சந்திக்கவில்லை
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் நான் தினகரனை சந்தித்து பேசவில்லை. நான் தினகரனை சந்தித்ததாக கூறுவது தவறான தகவல்.
இவ்வாறு மாணிக்கம் கூறினார்.












Click it and Unblock the Notifications