லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைதால் தர்மம் வென்றுள்ளது - புன்னகைக்கும் கே.பி.முனுசாமி
கட்சியை கைப்பற்ற மிகப்பெரிய தவறு செய்த டிடிவி தினகரன் தற்போது அதற்கான தண்டனையை அனுபவித்து வருவதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்த தவறுக்கு சட்டம் தன்னுடைய கடமையை செய்துள்ளதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் எடப்பாடி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைவதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம்அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தினகரன் கைது குறித்த கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பான தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதன் மூலம் தினகரன் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
எனவே சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதன்படியே டிடிவி மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்தாலும் நிச்சயம் தர்மம் வெல்லும் என்றும் முனுசாமி கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் நோக்கம் சசிகலா குடும்பத்தை சார்ந்த தீய சக்திகள் அகற்றப்பட வேண்டும் என்பதே என குறிப்பிட்ட முனுசாமி, இதை புரிந்து கொண்டு எதிர் அணி செயல்பாட்டில் இறங்கியுள்ளதால் இணக்கமான சூழல் ஏற்படும் போது இரு அணிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி இல்லாமல் மீண்டும் ஒரு கமா போட்டுள்ளார் முனுசாமி.