ஓ.பி.எஸ்.அண்ணே, காப்பாத்துங்கண்ணே.. கூவத்தூரிலிருந்து கதறும் அதிமுக எம்.எல்.ஏக்கள்
கூவத்தூரில் அடைபட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களை மீட்குமாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: கூவத்தூரில் அடைபட்டுள்ள பல எம்.எல்.ஏக்கள் தங்களைப் பார்க்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேகமாக வர வேண்டும் என்றும், தங்களை மீட்க வேண்டும் என்று கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நேற்று தனது செய்தியாளர் பேட்டியின்போது முதல்வரே கூட குறிப்பிட்டார். எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் தற்போது அங்கு அடைபட்டுள்ள பலரும் முதல்வர் வந்து தங்களை மீட்க வேண்டும் என்று கதறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அங்கு அடைக்கப்பட்டுள்ள பலரும் தற்போது மாட்டிக் கொண்டு விட்டோமே என்று பயந்து பெரும் கவலையில் மூழ்கியுள்ளனராம். இங்கிருந்து எப்படியாவது மீண்டு வெளியேற வேண்டும் என்று துடித்துக்கொண்டுள்ளனராம். அந்த அளவுக்கு அங்கு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்களாம்.
முதல்வருக்கு தகவல்
அவர்களில் பலர் முதல்வருக்கு தகவல் அனுப்பியுள்ளனராம். எப்படியாவது எங்களை மீட்டுச் செல்லுங்கள். விரைவாக வாருங்கள். எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாருங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனராம்.
கூவத்தூருக்கு வரக் கோரிக்கை
முதல்வர் உடனடியாக கூவத்தூருக்கு வர வேண்டும். சிக்கித் தவிக்கும் எங்களை மீட்க வேண்டும் என்று இந்த எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனராம். எத்தனை பேர் இப்படிக் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.
போகத் துடிக்கும் முதல்வர்
இவர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட முதல்வர் இதை புறம் தள்ள விரும்பவில்லையாம். அங்கு சென்று அவர்களை மீட்கத் துடிக்கிறாராம். நேற்றே அவர் கூவத்தூர் போவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் போகவில்லை.
தடுக்கும் போலீஸ்
முதல்வர் அங்கே போக வேண்டாம். நிலைமை சரியில்லை என்று அவருக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறி தடுத்து நிறுத்தியுள்ளனராம். நீங்க போகாதீங்க, தேவையில்லாத ரசாபாசம் உருவானால் அது உங்களுக்குத்தான் கெட்டப்பெயரை உருவாக்கும் என தடை போடுகிறதாம் போலீஸ் தரப்பு.
மொத்தத்தில் சிக்கித் தவிக்கும் எம்.எல்.ஏக்களுக்கு எப்போது விடிவு காலம் என்று தெரியவில்லை.