ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா, ரூ 22,500 கோடி நிவாரண நிதி - மோடியிடம் ஓபிஎஸ் கோரிக்கை
மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 22,500 கோடி நிவாரணம் தேவை என்று கோரிக்கை வைத்தார்.
கடந்த 12ம் தேதி சென்னையில் கரையைக் கடந்த வர்தா புயலுக்கு சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. மூன்று மாவட்டகளிலும் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தீவிர நிவாரண பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இன்று காலையில் டெல்லி புறப்பட்டு சென்றார் அவருடன் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், அரசு செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் 8 செயலாளர் உடன் சென்றனர்.
அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில், அதிமுக எம்.பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் மாலையில் பிரதமர் இல்லத்துக்கு சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது, முதல்வர் பன்னீர்செல்வம், தம்பிதுரை, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். வர்தா புயல் நிவாரணமாக, தமிழகத்திற்கு, 22 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை அளிக்கும்படி, பிரதமரிடம் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் மிக முக்கிய கோரிக்கையாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளூவர் சிலையை நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய, 184 பக்கங்கள் அடங்கிய மனுவை மோடியிடம், பன்னீர்செல்வம் வழங்கினார்.
முதல்வர் பிரதமரை சந்தித்த பிறகு ஓரிரு நாளில் மத்திய குழு தமிழகம் வருகிறது. அந்த குழு வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை பார்வையிடுகிறது. அந்த குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் பிரவீன் வசிஷ்தா தலைமையில் விவசாய துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அந்த குழு ஆய்வு செய்த பின்னர் அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்கிறது. அதன் பிறகு மத்திய அரசு தமிழகத்திற்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு அவரது மரணத்திற்கு பிறகு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications