சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா: ஒரே மேடையில் ஓபிஎஸ், ரஜினி, கமல் பங்கேற்பு
சிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவில் தமிழக அரசு பற்றி விமர்சித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி வரவேற
சென்னை: தமிழக அரசு குறித்து விமர்சனங்களை வைத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழாவில் ஒரே மேடையில் ஓபிஎஸ், அமைச்சர்களுடன் அமர்ந்தது அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவே கருதப்படுகிறது.
நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் சென்னை அடையாறில் இன்று திறக்கப்பட்டது. சுமார் ரூ.2.80 கோடியில் அமைக்கப்பட்ட இந்த மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்.
இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நாசர், விஜயகுமார், கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு வந்த ரஜினியையும், கமல் ஹாசனையும் துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்றார்.

ரஜினி, கமலை அழைத்த அமைச்சர்
மேடைக்கு கீழே உள்ள இருக்கையில் ரஜினியும், கமலும் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களை மேடைக்கு வந்து அமருமாறு அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இருவரும் மேடைக்கு வந்து அமர்ந்தனர்.

ரஜினி, கமலுக்கு பொன்னாடை
நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதேபோல் நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தினார். இது நடிகர்களுக்கே ஆச்சரியத்தை எழுப்பியது.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை
கடந்த மே மாதம் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டபோது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார். மேலும் இந்த பேச்சு ரஜினி அரசியலுக்கு வருவதற்கு அச்சாரமாக இருந்தது. சிஸ்டம் சரியில்லை என்ற பேச்சுக்கு ஆட்சியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஊழல் மலிந்து விட்டது
இதேபோல் கடந்த சில மாதங்களாக நடிகர் கமல்ஹாசனும் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துவிட்டது என தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த கருத்துகளுக்கு மிக கடுமையான பதிலடி கொடுத்தவர் அமைச்சர் ஜெயக்குமார்.

அரசியல் நாகரீகம்
தமிழக அரசு குறித்து நடிகர்கள் கமல், ரஜினி விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும், அதேபோல் கமலுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரே மேடையில் ஓபிஎஸ், ரஜினி, கமல் அமர்ந்திருந்தது நடிகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை நடிகர் சத்யராஜ் மணி மண்டப திறப்பு விழாவில் சுட்டிக் காட்டி பேசியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications