ஏற்காடு எங்களின் எஃகுக் கோட்டை.. ஓ.பி.எஸ். முழக்கம்
ஏற்காடு சட்டசபைத் தேர்தலையொட்டி வாழப்பாடியில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்தார் பன்னீர் செல்வம்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், ஏற்காடு தொகுதி அ.தி.மு.க.வின் எஃகு கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதி, எதிர்க்கட்சியாக இருக்கும் போது தமிழகர்களின் நலன் பற்றி பேசுவார். ஆனால், ஆளுங்கட்சியாக வரும் போது அதை மறந்துவிட்டு நிலஅபகரிப்பு போன்ற செயல்களில் இறங்குவார். அவர்களுடைய நாடகம் உலகத் தமிழர்களுக்கு நன்கு தெரியும்.
2009ஆம் ஆண்டில் இனப்படுகொலை நடைபெற்ற சமயத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். ராஜபக்சேவுடன் இந்திய அரசு சேர்ந்து கொண்டு படுகொலைகள் செய்வது திட்டமிட்டிருப்பது கருணாநிதிக்கு தெரிந்திருந்த நிலையிலும், அதைத் தடுக்காமல் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர். ஆனால், அவர் இன்று இலங்கை தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை ஏற்காடுக்கு அனுப்பி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.