மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே செயல்படுகிறோம்... அடித்துச் சொல்லும் பொன்னையன்!
ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : இருஅணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது. இரு அணிகளும் மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே இருக்கிறோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆகிறது ஆனால் அணிகளின் மனங்கள் இணையவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மைத்ரேயன் எம்பி முகநூலில் பதிவிட்ட கருத்து அதிமுகவில் மீண்டும் புகைச்சலைக் கிளப்பியது. மைத்ரேயனின் கருத்து அவரின் சொந்தக் கருத்து என்று மக்களவை துணை சபாநாயகரும், எம்பியுமான தம்பிதுரை தெரிவித்தார்.
இதற்கு தான் கூறியது தனிப்பட்ட கருத்து அல்ல, தொண்டர்களின் மன நிலை அது தான் என்று இன்று மீண்டும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தால் மைத்ரேயன். மைத்ரேயனின் அடுத்தடுத்தப் பதிவுகள் இரண்டு அணிகளுக்கு இடையில் நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் இந்த கருத்துக்கு முதல்வர் பழனிசாமியோ, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ இன்னும் வாய் திறக்கவேயில்லை.
இதனிடையே மைத்ரேயனின் லேட்டஸ்ட் அப்டேட்டில் தங்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் என்று ஒதுக்க வேண்டாம். முதல்வர்அணியினர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை ஒதுக்குவதாகக் கூறியுள்ளார். ஆனால் மைத்ரேயன் எம்பியின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பொன்னையன், இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது. இரு அணிகளும் மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.