சிறைக்கு செல்கிறார் சசிகலா... திருவிழா கோலம் பூண்டது கிரீன்வேஸ் சாலை!!
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால் முதல்வர் ஓபிஎஸ் வீடு முன்பு தொண்டர்கள் ஆனந்த கூத்தாடி வருகின்றனர்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் ஆனந்த கூத்தாடி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த உச்சநீதிமன்றம் அவர்கள் 3 பேரையும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே சசிகலா மேல் எரிச்சலில் இருந்த மக்களை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குளிர வைத்துள்ளது.
கிரீன்வேஸ் சாலையில் லட்டு, கேசரி
சசிகலாவுக்கு மரணடியாக விழுந்துள்ள இந்த தீர்ப்பால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓபிஎஸ் இல்லம் முன்பாக கூடியுள்ள அவரது ஆதரவாளர்கள், லட்டு, கேசரி போன்ற இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
ஓபிஎஸ் வீட்டின் முன்பு குத்தாட்டம்
வெடிகளை வெடித்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்றுள்ளனர். தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர்கள் ஓபிஎஸ் வீட்டின் முன்பு நடனமாடினர்.
பெரிய திரையில் தீர்ப்பு செய்தி
முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் முன்பாக பெரிய திரை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா விடுவிப்பு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட உச்ச நீதிமன்ற செய்தி தொடர்ந்து ஒளிப்பரப்பப்படுகிறது.
குவியும் தொண்டர்கள்
சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பை கொண்டாடும் வகையில் ஏராளமான தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். இதனால் கிரீன்வேஸ் சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.