அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல உள்ளது ஜெ.வின் மருத்துவ அறிக்கை.. செம்மலை தாக்கு
டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போன்று உள்ளது என்று ஓபிஎஸ் ஆதரவு அணியில் உள்ள செம்மலை கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து எய்ம்ஸ் அளித்த அறிக்கையை தமிழக அரசு டெல்லியில் வெளியிட்டது. இது முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று செம்மலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செம்மலை கூறியதாவது: முதலில் லேசான காய்ச்சல் காரணமாக அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதே மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் சம்மரியில் மயக்க நிலையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டார் என்று கூறியுள்ளது.
(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)
ஆக இவர்கள் அளிக்கும் அறிக்கையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அரசு செயலாளர் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறுகிறார். இவர்கள் சொல்வதைப் பார்த்தால் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது.

போயஸ் கார்டனில் நடந்தது என்ன?
உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கக் கூடிய அளவிற்கு ஜெயலலிதாவிற்கு என்ன நேர்ந்தது? குறிப்பாக செப்டம்பர் 22ம் தேதி இரவு போயஸ் கார்டனில் என்ன நடந்தது? எதனால் மயக்கம் அடைந்தார்? மயக்கத்தில் இருந்து எப்போது எழுந்தார்? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மயக்க நிலையில் இருந்தார் என்றால் ஏன் காய்ச்சல், நீர்சத்துக் குறைவு என்று அறிக்கை வெளியிடப்பட்டது?

மர்மம் நிறைந்த மரணம்
இந்த 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல பத்திரிகைகள் கூறுகின்றன. இதனை பார்க்கும் போது, ஏதோ மரணத்தில் ரகசியங்கள் இருப்பது தெரிகிறது.

நீதி விசாரணை வேண்டும்
மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கு அறிக்கை போதாது. நீதி விசாரணை வேண்டும். அதுவும் மத்திய அரசு நியமிக்கக் கூடிய நீதி விசாரணை வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளி வரும். அவசர அவசரமாக அறிக்கையை இப்போது வெளியிட வேண்டிய அவசியம் என்ன? ஒரே தடவையாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதுதானே.

அறிக்கைகளை நம்ப முடியாது..
அறிக்கைகள், பேட்டிகள் எல்லாம் எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம். அறிக்கைகள் திருத்தப்படலாம் என்பதால் அறிக்கைகள், பேட்டிகளை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டதில் இருந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது வரை அனைத்து உண்மைகளும் வெளியே வர வேண்டும். அது நீதி விசாரணையே தீர்வாகும் என்று செம்மலை கூறினார் .
ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்












Click it and Unblock the Notifications