உப்பு சப்பில்லாமல் முடிந்த ஓபிஎஸ் அணி மீட்டிங்.. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பத்திதான் பேசினாங்களாம்
ஓபிஎஸ் அணியினர் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். இதில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரதமரை சந்தித்த நிலையில் ஓபிஎஸ் அணியினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதனால் அதிமுகவின் இன்னொரு அணியான பழனிச்சாமி அணி கதி கலங்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி புறப்பட்டு சென்று, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மாற்றி மாற்றி இரு அணியினரும் பிரதமரை சந்திப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசர ஆலோசனை
இந்நிலையில், இன்று காலை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, பொன்னையன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ள நிலையில் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு பின்னர், அரசியல் பரபரப்பிற்கான செய்தி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு
ஜனாதிபதி தேர்தல் குறித்து கூறிய ஓபிஎஸ், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கப்பட்ட பின்னர்தான் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

வலிந்து ஆதரவு
அதிமுகவின் பிளவை பயன்படுத்தி பாஜக பல வேளைகளை தமிழகத்தில் செய்து வருகிறது. பாஜகவை பயன்படுத்தி ஏதாவது செய்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் அல்லது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று இரு அணிகளும் மாறி மாறி பாஜகவிற்கு அஞ்சி செயல்பட்டு வருவது தமிழக மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications