ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓபிஎஸ் நம்பிக்கை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15-ந் தேதி எண்ணப்படுகின்றன. இத்தொகுதியில் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா போட்டியிட உள்ளார்.
அதேபோல் ஓபிஎஸ் அதிமுகவும் சசிகலா அதிமுகவும் இத்தொகுதியில் போட்டியிட உள்ளன. அதிமுக வாக்குகள் சிதறி கிடக்கும் நிலையில் இத்தொகுதியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆளும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர் என்றார்.