ஓபிஎஸ் இன்று முதல்வர்... நாளை?... அதை நான் சொல்லமாட்டேன்- ஸ்டாலின்
இன்றைக்கு முதல்வராக இருக்கக் கூடிய ஓ.பன்னீர் செல்வம் நாளை முதல்வராக இருப்பாரா இல்லையா? என்பது எனக்கு தெரியாது அதை நான் சொல்ல மாட்டேன் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூர் வாடி வாசல் அருகே நடந்த போராட்டத்தில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், திமுக ஆட்சியின் போது ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிமுக அரசே காரணம்
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை தற்போது பின்பற்றப்படாததால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அதிமுக அரசே காரணம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

ஓபிஎஸ் பேச்சு
சட்டசபையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பை வழங்கும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தமிழக அரசு போராடி வருகிறது என்று பேசிய ஓ.பன்னீர் செல்வம் இப்போது முதல்வராக இருக்கிறார்.

முதல்வரா? இல்லையா?
2015ம் ஆண்டு முதல்வராக இருந்தார் ஒ.பன்னீர் செல்வம், இப்போதும் முதல்வராக இருக்கிறார். நாளை அவர் முதல்வராக இருப்பாரா? இல்லையா என்பது தெரியாது. அது அவர்களின் உட்கட்சி விவகாரம். ஆனால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார்.

தமிழன்னை சிலை
முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழன்னைக்கு பல கோடி செலவில் சிலை அமைக்கப்படும் என்று கூறினார். ஆனால் அதற்கான ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications