தனியார் காப்பகத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது 6 பேர் தலைமறைவு
திருப்பூர்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தனியார் காப்பக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகவுள்ள, மீதமுள்ள 6 குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள அழகுமலையில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 70-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.
சமீபத்தில் இக்காப்பகத்தில் உள்ள 13 வயது சிறுமி ஒருவர், தனக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை தருவதாக திருப்பூர் குழந்தைகள் நலக்குழுவினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பல்லடம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமி தங்கியிருந்த தனியார் காப்பகத்தின் செயல் இயக்குநர் வியாக்குலமேரி, இயக்குநர் அலோசியஸ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் போலீஸ் விசாரணைக்குப் பயந்து தலைமறைவானார்கள். அவர்களைப் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நிலக்கோட்டையில் 2 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த காப்பக ஊழியர்களான மணிகண்டன், வேல்முருகன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்த பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார், தலைமறைவாகவுள்ள மீதமுள்ள ஆறு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications