அமைதியாக, விறுவிறுப்பாக நடந்த ஸ்ரீரங்கம் வாக்குப் பதிவு - 81.79% ; நாளை மறுநாள் 'ரிசல்ட்'!!
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்தது. மொத்தம் 81.79% வாக்குகள் பதிவாயின. நாளை மறுநாள் திங்கள்கிழமையன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவி பறிபோனது.

இதையடுத்து இத் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் எஸ்.வளர்மதி (அ.தி.மு.க.), என்.ஆனந்த் (தி.மு.க.), எம்.சுப்பிரமணியம் (பா.ஜ.க.), கே.அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்) உட்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இத்தொகுதியில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதற்காக 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குப் பதிவு
வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.
விறுவிறு....
பல வாக்குச்சாவடிகளில் 7 மணிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வரிசையில் காத்து நின்றனர். ஏராளமான ஆண்களும், பெண்களும் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
வெப் கேமரா
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததால் வாக்குப்பதிவு காட்சிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னையில் உள்ள மாநில தலைமை தேர்தல் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் கண்காணித்தனர்.
கையடக்க கணினி
இது தவிர இந்தியாவிலேயே முதல் முறையாக கையடக்க கணினி மூலம் வாக்குப்பதிவு நிலவரங்களை பதிவு செய்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கும் வசதியும் இத் தேர்தலில் அமல்படுத்தப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு காட்சிகள் தமிழக அரசின் கேபிள் டி.வி நிறுவனம் மூலம் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அசம்பாவிதம்
ஒரு சில வாக்குச்சாவடிகளை தவிர பெரும்பாலான வாக்குச்சாவடிகளின் முன்பாக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இது தவிர தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.
சில இடங்களில் சர்ச்சை
ஒரு சில இடங்களில் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. முத்தரசநல்லூர் போன்ற இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள் கொந்தளித்தனர்.
81.79% வாக்குப் பதிவு
மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு முடிந்தது. 81.79% வாக்குகள் பதிவானதாக திருச்சி ஆட்சியர் அலுவலகம் சார்பில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 60 வாக்காளர்கள் நேற்று வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 976 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 77 பேரும், இதர வாக்காளர்கள் 7 பேரும் வாக்களித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2011-ல் 82.04% வாக்குப் பதிவு
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் 82.04% வாக்குகள் பதிவாகி இருந்தன.
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் உள்ள சாராநாதன் பொறியியல் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.நாளை மறுநாள் திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பகல் ஒரு மணிக்குள் முடிவு தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications