கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை திரும்பப் பெறுக !: வைகோ
சென்னை: தமிழக அரசு இடிந்தகரை மக்கள் மீது தொடர்ந்த பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இடிந்தகரை மக்கள் மனஉறுதியுடன் அறவழியில் போராடி வருகின்றனர். அணுஉலை விபத்து கதிர்வீச்சால் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் தாக்கத்தால் அந்நாடுகளில் மக்கள் தற்போதும் பாதிக்கப்பட்டு வரும் நிகழ்வுகளே கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததற்குக் காரணம் ஆகும்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெள்ள நீர் திறக்கப்பட்டபோது தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய முடியாமல் செயலற்றுக் கிடந்த அரசு நிர்வாகம், கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சு அபாயம் நேரிட்டால் மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்கும்? தங்கள் எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும், உடல் நலத்துடனும் வாழ்வதை உறுதி செய்வதற்காகத்தான் கூடங்குளம் மக்கள் பொங்கி எழுந்து போராடி வருகின்றனர்.
இடிந்தகரை மக்களின் நியாயமான போராட்டத்தின் நோக்கத்தை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா அரசு, அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கிய 2 இலட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 380 பொய் வழக்குகளை புனைந்தது. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு ஒரு லட்சம் மக்கள் மீது புனையப்பட்ட 132 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசத்துரோகம், அரசுக்கு எதிரான போர், வெடிகுண்டு வீசுதல், பொதுச்சொத்துகளுக்கு சேதாரம், கொலை முயற்சி, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல் போன்ற பொய் வழக்குகள் தொடரப்பட்டு, மிக மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு நாள்தோறும் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் இடிந்தகரை சாதாரண ஏழை எளிய மக்கள் நொறுங்கிக் கிடக்கிறார்கள். எனவே, தமிழக அரசு இடிந்தகரை மக்கள் மீது தொடர்ந்த பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவில் பொறுப்பாளராக இயங்கி வந்த தோழர் முகிலன் அவர்கள் தம் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்காக டிசம்பர் 23 ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தின் முன்நின்று கைதாகி உள்ளார். அவர் கூடங்குளம் அணுஉலை குறித்து சில முகாமையான கோரிக்கைகளை வைத்துள்ளார்.
கூடங்குளம் அணுஉலைக் கழிவுகள் கடுமையான கதிர்வீச்சுத்தன்மை வாய்ந்தவை. இவற்றை 48 ஆயிரம் ஆண்டுகள் மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும். ஆபத்தான இக்கழிவுகள் தற்போது அணுஉலை வளாகத்திலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்துக்கு அபாயகரமானதாக இருக்கும் அணுஉலைக் கழிவுகளை உடனே அகற்ற வnண்டும். கூடங்குளம் அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதிகளில், அணுசக்தி ஒழுங்காற்று வாரிய சட்டத்திற்கு விரோதமாக, தமிழக அரசு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 756 ஏக்கர் நிலத்தை தாதுமணல் எடுப்பதற்காக வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
கூடங்குளத்தில் மேலும் 3, 4, 5, 6ஆவது அணுஉலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதை மத்திய அரசு கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள தோழர் முகிலன், தம் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள பொய் வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் நேர் நின்று கைதாகி சிறைவாசத்தை ஏற்று இருக்கிறார். மக்கள் நலனுக்காகப் போராடி வரும் தோழர் முகிலனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எந்நாளும் துணை நிற்கும் என்று வைகோ கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications