எப்போதும் குஜராத் புராணம்.. பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டாரோ?.. ப.சிதம்பரம் கேள்வி
எப்போதும் குஜராத் புராணம் பாடி வரும் மோடி, தான் இந்தியாவின் பிரதமர் என்பதையே மறந்து விட்டாரோ? என்று ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.
சென்னை : குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி தன்னைப் பற்றியும், குஜராத் குறித்து பேசுவதை பார்த்தால் அவர் இந்திய பிரதமர் என்பதை மறந்துவிட்டாரோ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலத்துக்கு வரும் டிசம்பர் 9, 14 ஆகிய இரு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றன.
இருவரும் மாறி மாறி அவரவர் ஆட்சியில் நடந்த சாதக, பாதக நிலைகளை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
|
குஜராத் குறித்தே பேச்சு
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர் டுவீட்டுகளில் கூறுகையில், பிரதமர் மோடி தனது பிரசாரதச்தின் போது தன்னை பற்றியும், குஜராத் முதல்வராக இருந்த போது அவர் செய்த திட்டங்கள் குறித்தும், கடந்த காலங்களில் குஜராத் மற்றும் அதன் மக்களை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை என்பதையே கூறிவருகிறார். நாட்டின் பிரதமர் என்பதையே அவர் மறந்துவிட்டாரோ.
|
பிரதமர் பேசுவதில்லையே
வேலையின்மை, குறைந்த முதலீடு, சிறு குறு தொழில்கள் சரிவு, ஏற்றுமதி தேக்கம் மற்றும் விலை உயர்வு குறித்து பிரதமர் பேசுவதில்லை. ஏனென்றால் அதற்கு அவரிடம் பதில்கள் இல்லை.
|
42 மாதங்கள்
குஜராத் தேர்தல் என்பது மோடி என்ற தனிமனிதருக்கானது அல்ல. நல்ல நாள் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து 42 மாதங்களாகியும் நிறைவேற்றாததை குறித்தது ஆகும்.
|
காங்கிரஸ் கட்சிதான்
காந்தியடிகள் இந்தியா மற்றும் குஜராத்தின் மகன் என்பதையும் தேசப்பிதா என போற்றப்படுவதையும் மோடி மறந்துவிட்டார். சுதந்திர போராட்டங்களை முன்னெடுக்க காந்தி தேர்வு செய்த கருவி காங்கிரஸ் கட்சிதான்.
|
ஆர்எஸ்எஸ்ஸை பட்டேல் ஏற்கவில்லை
பிரதமரும், பாஜகவுக்கு தற்போது சர்தர் வல்லபபாய் பட்டேல் மீது அக்கறை கொள்ளலாம், ஆனால் அவரே பாஜகவின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் அதன் பிரிவினைவாத சித்தாந்தத்தையும் ஏற்க மறுத்துவிட்டார் என்று ப.சிதம்பரம் தனது தொடர் டுவிட்டுகளில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications